மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஒரே நேரத்தில் குடும்ப ஓய்வூதியங்களை பெற உரிமை உண்டு - சென்னை ஐகோர்ட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2014

மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஒரே நேரத்தில் குடும்ப ஓய்வூதியங்களை பெற உரிமை உண்டு - சென்னை ஐகோர்ட்டு


முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஒரே நேரத்தில் குடும்ப ஓய்வூதியங்களை பெற உரிமை உண்டு
என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.சென்னை ஐகோர்ட்டில், கே.ஞானசுந்தரி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– ராணுவ வீரர் என் கணவர் ஆர்.கேசவன், இந்திய ராணுவத்தில் பணியாற்றி 1989–ம் ஆண்டு கட்டாய ஓய்வுப்பெற்றார். அப்போது,ஓய்வூதிய பண பலன்கள் அனைத்தும் பெற்று விட்டார். இதன்பின்னர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் 1992–ம் ஆண்டு சேர்ந்தார்.

இந்த நிலையில் பணியில் இருக்கும்போது, பாம்பு கடித்ததில் அவர் 2009–ம் ஆண்டு இறந்து விட்டார். இதையடுத்து இந்திய ராணுவத்தில் இருந்து எனக்கும், என் 3 குழந்தைகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல, தீயணைப்பு துறையில் 17 ஆண்டுகள் என் கணவர் பணியாற்றியதால், குடும்ப ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் செய்தேன். ஆனால், நான் இந்திய ராணுவத்திடம் இருந்து குடும்ப ஓய்வூதியம் பெறுவதால், மாநில அரசிடம் இருந்து குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியில்லை என்று தீயணைப்புத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து, எங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஏ.முகமது இஸ்மாயில், தமிழக அரசு சார்பில் சிறப்பு அரசு பிளீடர் ஏ.குமார், முதன்மை கணக்கு தணிக்கை துறை சார்பில் ஹேமா முரளிகிருஷ்ணா ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில், ராணுவத்தில் பணியாற்றியதற்காகவும், மாநில போக்குவரத்து கழகத்தில் பணியாற்றியதற்காகவும் தனித்தனியாக குடும்ப ஓய்வூதியம்பெற முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு உரிமை உண்டு என்று இந்த ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

எனவே அந்த தீர்ப்பு இந்தவழக்கிலும் பொருந்தும். மனுதாரர் குணசுந்தரி, ராணுவத்துறையிடம் இருந்து பெறும் குடும்ப ஓய்வூதியத்தை கருத்தில் கொள்ளாமல், அவரது கணவர் தீயணைப்பு துறையில் பணியாற்றியதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு குடும்ப ஓய்வூதியத்தை, மனுதாரருக்கு 8 வாரத்துக்குள் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி