தரம் உயர்த்தியும், நிதி ஒதுக்கப்படாததால் இடநெருக்கடியில் தவிக்கும் பள்ளிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2014

தரம் உயர்த்தியும், நிதி ஒதுக்கப்படாததால் இடநெருக்கடியில் தவிக்கும் பள்ளிகள்.


தமிழகத்தில் கடந்த நான்குஆண்டுகளில் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 1304 பள்ளிகளுக்கு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதிஒதுக்கப்படாமல் இடநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.
அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு போதிய கட்டமைப்புவசதி, அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள் பணி நியமனம், ஆய்வக வசதி போன்றவற்றை மத்திய அரசு 75 சதவீத நிதி ஒதுக்கீடு செய்தும், மாநில அரசு 25 சதவீத நிதிஒதுக்கீடு செய்தும் வழங்கிவருகிறது.கடந்த 2010-11ம் ஆண்டு 710 பள்ளிகள், 2011-12ல் 344; 2012-13ல் 200; 2013-14ல் 50 பள்ளிகள் எனநான்கு ஆண்டுகளில் 1304 பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி கழிப்பிடம், குடிநீர் தொட்டி போன்றவையும், தலைமையாசிரியர் அறை, வகுப்பறை, ஆய்வக கூடம், நூலகம், கம்ப்யூட்டர் லேப் உட்பட 11 அறைகள் முதல்கட்டமாக ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இதுவரை, எவ்வித வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.நடுநிலைப்பள்ளிகளின் கட்டடத்திலேயே தற்போது மிகுந்த இடநெருக்கடிக்கு நடுவில் உயர்நிலைப்பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன. மாணவர்களை உட்கார வைப்பதற்கு கூட இடமில்லை என்று தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நான்கு ஆண்டுகளாக கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி இல்லாத நிலையில் தொடர்ந்து பள்ளிகளை, தரம் உயர்த்தி அறிவித்துக்கொண்டே இருக்கும் மாநில அரசு இப்பிரச்னைக்கு என்ன தீர்வு காணப்போகிறது என்பது கேள்விக்குறியே.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 2009-10ல் தரம் உயர்த்தப்பட்ட நான்கு உயர்நிலை பள்ளிகளை தவிர 2010ம் ஆண்டுக்கு பின் எந்த பள்ளிகளுக்கும் கட்டடவசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "எங்கள் பள்ளி 2010ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதுவரை, எந்த கட்டமைப்பு வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் பாடம் நடத்தி வருகிறோம். குறிப்பாக, டாய்லெட் வசதிகள் இன்றி மாணவிகள் சிரமப்படுகின்றனர்.

நான்கு ஆண்டுகளாக இதுகுறித்து எந்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில்,வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை எவ்வாறு நடத்த முடியும். நிதியில்லாமல், பள்ளிகளை, தொடர்ந்து தரம் உயர்த்தி அரசு ஏன் அறிவிக்கிறது என புரியவில்லை" என்றார்.அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்க திட்ட இயக்குநர் சங்கர் கூறுகையில், "தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி, பொது பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு இதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பிற தகவல்களை தெரிவிக்க இயலாது" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி