ஆசிரியர் கவுன்சலிங் தாமதத்தால் அரசு பள்ளியில் ஒரு மாதம் வீணடிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2014

ஆசிரியர் கவுன்சலிங் தாமதத்தால் அரசு பள்ளியில் ஒரு மாதம் வீணடிப்பு.


பள்ளி திறந்து ஒரு மாதமாகியுள்ள நிலையில், கவுன்சலிங் நடத்தப்படுவதால், மாறுதல்பெற விரும்பிய ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் அலட்சியப்போக்குடன் இருப்பதால், பல பள்ளிகளில், கற்பித்தல் பணிகளில், கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கவுன்சலிங், கோடை விடுமுறையான மே மாதத்தில் நடத்தப்பட்டு வந்தது.இதனால், பள்ளி திறந்தவுடன், பணிமாறுதல் பெற்ற தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும், ஜூன் முதல் தேதியிலேயே, புதிய பணியிடத்தில் சேர்ந்து விடுவதால்,கற்பித்தல் பணிகளில் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது.இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் மாறுதல், ஜூன், 18ம் தேதி முதல், ஜூன், 29ம் தேதி வரை நடக்கிறது. இதில், வேறு பள்ளிக்கு மாறுதல் பெற வேண்டும் என முடிவு செய்த ஆசிரியர்கள், இந்த ஒரு மாதத்தில், பள்ளி பணிகளில் ஆர்வம் காட்டவில்லை.

அதிலும், மாறுதல் பெற விரும்பிய தலைமை ஆசிரியர்கள் இருந்த பள்ளிகளில், நிர்வாகம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. அதனால், அப்பள்ளிகளில், கற்பித்தல் பணிகளில், தொய்வு ஏற்பட்டுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: மாறுதல் முடிவெடுத்த தலைமை ஆசிரியர்கள், ஒரு மாதமாக, எவ்வித முடிவும் எடுக்கவில்லை. உதாரணமாக, பாடப்புத்தகம் பற்றாக்குறையாக இருப்பின், அதை அருகில் உள்ள பள்ளிகளிலோ அல்லது கல்வித்துறை அலுவலகத்திலோ பேசி, பெற்றுத்தர வேண்டும்.இதுபோன்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டதுடன், மாணவர் சேர்க்கையிலும் அக்கறை காட்டவில்லை.

மாறுதல் முடிவெடுத்த ஆசிரியர்களின் வகுப்பறையிலும், இதே நிலைதான் காணப்படுகிறது. இதனால், ஒரு மாதம், பல பள்ளிகளில், மாணவர்களுக்கு வீணடிக்கப்பட்ட மாதமாகவே உள்ளது. அதனால், பணிமாறுதல் கவுன்சலிங்கை, அடுத்த ஆண்டிலாவது, கோடை விடுமுறையிலேயே முடித்துவிட, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி