பெண் குழந்தை விடுதிகளின் பாதுகாப்பிற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2014

பெண் குழந்தை விடுதிகளின் பாதுகாப்பிற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு.


தமிழகத்தில், விடுதிகளில் தங்கும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் விடுதியில் தங்கி இருந்த, இரண்டு மாணவியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.வீட்டிற்கு வெளியில் தங்கியுள்ள மாணவியர், பெண் குழந்தைகள், வளர் இளம்பெண்கள், பணிபுரியும் மகளிரின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய, அரசு உருவாக்கிய, புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இறுதியில், விடுதி மற்றும் இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள், புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு, உடனடியாக உட்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.

பொது விதிமுறைகள்

* உரிய அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டடங்களில் மட்டுமே, விடுதி மற்றும் காப்பகம் அமைய வேண்டும்.
* ஆண் மற்றும் பெண் குழந்தைகள், பெண்கள் தங்கும் அமைவிடமாக இருந்தால், தனித்தனியே கட்டடங்கள் அமைய வேண்டும்.
* ஆண் மற்றும் பெண் குழந்தைகள், ஒரே கட்டடத்தில் தங்க நேர்ந்தால், தனித்தனி அறைகளில், தங்க வைக்க வேண்டும்.
* விடுதி காப்பாளர் மற்றும் பொறுப்பாளராக, பெண்களையே நியமிக்க வேண்டும்.

அனைத்து வாசல்களிலும்...

* ஐம்பது குழந்தைகளுக்கு, ஒரு விடுதி காப்பாளர் இருக்க வேண்டும்.
* விடுதிகளில், 24 மணி நேரமும், பாதுகாவலர் பணியில் இருக்க வேண்டும்.
* ஒன்றுக்கும் மேற்பட்ட வாசல் இருந்தால், அனைத்து வாசல்களிலும், பாதுகாப்பு பணியாளரை, நியமிக்க வேண்டும்.
* வாசல்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
* விடுதி காப்பாளர், பாதுகாவலர், முன் அனுமதி பெறாமலோ, மாற்று ஏற்பாடு செய்யாமலோ, பணிக்கு வராமல் இருக்கக் கூடாது.
* விடுதி காப்பாளர் அல்லது துணை விடுதி காப்பாளர், எந்த நேரத்திலும், விடுதியில் இருக்க வேண்டும்.
* பாதுகாவலர்களை, அவசர காரணமின்றி, விடுதி கட்டடங்களுக்குள், அனுமதிக்கக் கூடாது.
* அமைவிடம், நான்கு புற சுற்றுச்சுவருக்குள் இருக்க வேண்டும். தாழ்ப்பாளுடன் கூடிய கதவு இருக்க வேண்டும்.

தினசரி வருகை பதிவேட்டில்...

* விடுதியில் தங்கியிருப்போர், வெளியில் செல்லும் நேரம், திரும்பும் நேரத்தை, தினசரி வருகைப் பதிவேட்டில், விடுதி காப்பாளர் பதிவு செய்ய வேண்டும்.
* விடுதியில் தங்கியிருப்போர், தூங்க செல்வதற்கு முன், கணக்கெடுக்க வேண்டும்.
* பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவலர்களை மட்டும், நிர்ணயிக்கப்பட்டநேரத்தில், வரவேற்பறையில் மட்டும் பார்க்க அனுமதிக்க வேண்டும்.வெளிநபர்கள் கட்டடத்திற்குள் நுழைய தடை
* சிறு வயது ஆண் மற்றும் பெண் குழந்தைகள், வளர் இளம்பெண்களை, விடுமுறை நாட்களில், வீட்டிற்கு அனுப்பும் போது, பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம், விடுதி காப்பாளர் ஒப்படைக்க வேண்டும். தனியாகவோ, வெளியாட்களுடனோ அனுப்பக்கூடாது.
* விடுதி காப்பாளர் மற்றும் பாதுகாவலருக்கு, புகைப்படத்துடன் கூடிய, அடையாள அட்டை வழங்க வேண்டும்.
* விடுதி காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களின் டெலிபோன் எண் மற்றும் முகவரி, காப்பகத்தின் முன்வாயிலில் வைக்கப்பட வேண்டும். இவ்வாறு, வழிகாட்டி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ரோந்து பணிக்கு ஏற்பாடு

இதுதவிர, விடுதி காப்பாளர், பாதுகாவலரை நியமிக்கப்பதற்கு முன், அவர்கள் குறித்து, போலீசாரிடம், மருத்துவமனையில் சான்றிதழ் பெற வேண்டும்; மாவட்ட கலெக்டர் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமல், அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

விடுதி, இல்லம், அமைவிடம் குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பட்டியலை, போலீஸ் எஸ்.பி.,யிடம் ஒப்படைக்க வேண்டும். அவர், இரவு ரோந்து பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உட்பட, பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி