பொதுத் தேர்வில் ஆசிரியர்களிடம் முறைத்தால் நிரந்தர தடை தேர்வுத்துறை முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2015

பொதுத் தேர்வில் ஆசிரியர்களிடம் முறைத்தால் நிரந்தர தடை தேர்வுத்துறை முடிவு


சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. சென்னையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 10 பறக்கும் படையும், தென்சென்னை, மத்திய சென்னை, கிழக்கு சென்னை, வடசென்னை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 4 பறக்கும் படைகள் அமைக்கப்படும்.

மேலும் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகளும்தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிளஸ் 2 தேர்வுக்காக, தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுப்பாட்டாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 2800 தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பிளஸ் 2 தேர்வில் ஒழுங்கீன செயலில் ஈடுபடுவோரை தடுக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இதன்படி, தேர்வு அறைக்குள் துண்டுச்சீட்டு வைத்திருந்தாலோ, அச்சிடப்பட்ட புத்தகத்தை வைத்திருந்தாலோ ஓராண்டு அவர்கள் தேர்வு எழுத தடை விதித்தும், துண்டுச்சீட்டு பார்த்து எழுதுதல் மற்ற மாணவர்களின் விடைத்தாட்களை பார்த்து எழுதுதல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்களை இரண்டு ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கவும் முடிவு செய்துள்ளது. ஹால்டிக்கெட் மற்றும் விடைத்தாள் ஆகியவற்றில் மாணவ மாணவியரின் போட்டோக்கள் இடம் பெறுவதால் ஆள்மாறாட்டம் நடக்க வாய்ப்பில்லை. அதனால் பிட் அடிப்பது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.தேர்வு அறைக்குள் அறை கண்காணிப்பாளர், தேர்வெழுதும் மாணவ, மாணவியர் கண்டிப்பாக செல்போன் வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வைத்திருந்தால் துறை அலுவலர் கள் அல்லது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து மேல்தொடர் நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆசிரியர்களிடம் முறைத்தால் நிரந்தர தடை

தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம் தேர்வு நேரத்திலோ அல்லது தேர்வு முடிந்து வெளியில் செல்லும்போதோ முறைகேடான செயல்களில் நடந்துகொள்ளும் மாணவர்கள், மற்ற மாணவர்களின் விடைத்தாட்களை வாங்கி எழுதுவது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு நிரந்தரமாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். மேலும் அந்த மாணவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி