சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மீண்டும் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதா?ராமதாஸ் காட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2015

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மீண்டும் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதா?ராமதாஸ் காட்டம்

இந்தியாவில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மீண்டும் சமஸ்கிருத வாரம் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,


இந்தியா முழுவதும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய(சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் நேற்று முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு எழக்கூடாது என்பதற்காக ஆகஸ்ட் 25 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பி, அதற்கு அடுத்த நாளே கொண்டாட்டத்தை தொடங்கும்படி சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரத்தை கடந்த ஆண்டே சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிமுகம் செய்தது. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்ற சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் அறிவிப்புக்கு தமிழகத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. தமிழகத்தின் உணர்வுகளை மதித்துசமஸ்கிருத வாரத் திணிப்பை சி.பி.எஸ்.இ. கைவிட்டிருக்க வேண்டும். ஆனால், சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு,இதற்கு எதிர்ப்பு எழுந்து விடக்கூடாது என்பதற்காக கமுக்கமாக சுற்றறிக்கை அனுப்பி அடுத்த நாளே கொண்டாட்டத்தை தொடங்குவது நல்லாட்சிக்கு அடையாளமோ, வெளிப்படையான செயலோ அல்ல. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.‘‘சமஸ்கிருதம் இந்தியாவின் தொன்மையான மொழிகளில் ஒன்று. இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாச்சார வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள வேண்டுமானால் சமஸ்கிருதத்தை நன்றாக அறிந்திருப்பது மிகவும் முக்கியம்’’ என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் தவறானது ஆகும். ‘‘ உலக மொழிகளுக்கெல்லாம் தமிழ் தாய்மொழி.

சமஸ்கிருதத்துக்கு தமிழ் மூல மொழி’’ என்பதை பாவாணர் ஆதாரங்களுடன் மெய்ப்பித்துள்ளார். சமஸ்கிருதம் வாய் மொழி... தமிழ் வாழ்மொழி என்பது மொழியறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை. சமஸ்கிருதத்தை வெறும் 14,000 பேர் மட்டுமே பேசுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள்தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் தமிழ் உலகம் முழுவதும் 10 கோடி மக்களால் பேசப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது தமிழ் உட்பட பல்வேறு மொழிகளைப் பேசி, தனித்தனி கலாச்சாரத்தைக் கடைபிடிக்கும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் மீது சமஸ்கிருத திணிக்கப்படுவதை ஏற்க முடியாது.தட்பவெப்ப நிலை மாறி விதைக்கப்படும் பயிர்களை மண் கூட ஏற்றுக்கொள்ளாது எனும் போது, இனம் மாறி திணிக்கப்படும் மொழியையும், கலாச்சாரத்தையும் மக்கள் ஒருபோதும்ஏற்க மாட்டார்கள்.

எனவே, சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்தை உடனடியாக நிறுத்தும்படி நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு(சி.பி.எஸ்.இ) அரசு ஆணையிட வேண்டும். மேலும், பா.ம.க. ஏற்கனவே வலியுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் உள்ளூர் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எஸ்.இ நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று கூறயுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி