பள்ளிகளில் நூடுலஸ்,சிப்ஸ் விற்பனைக்கு வருகிறது தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2015

பள்ளிகளில் நூடுலஸ்,சிப்ஸ் விற்பனைக்கு வருகிறது தடை

'நுாடுல்ஸ், சிப்ஸ்' போன்ற, 'ஜங்க் புட்' எனப்படும், சத்தற்ற உணவுப் பொருட்களை, பள்ளிகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில் விற்பதற்கு தடை விதிக்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் திட்டமிட்டுள்ளது. இக்கட்டுப்பாடு, விரைவில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


நாடு முழுதும், பள்ளிகளிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், 'ஜங்க்' உணவுகள் விற்பதை தடுக்கும் விதிமுறைகளை, மூன்று மாத காலத்தில் வகுக்குமாறு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்துக்கு, டில்லி ஐகோர்ட், 2015, மார்ச்சில் உத்தரவிட்டிருந்தது.


உப்பு நிறைந்த...:


இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வரைவு நெறிமுறைகளை வகுத்து உள்ளது. இதுகுறித்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., கூறியுள்ளதாவது:தம் விருப்ப உணவை தேர்வு செய்யும் திறன், பள்ளிக் குழந்தைகளுக்கு இல்லை. எனவே, கொழுப்புச்சத்து, உப்பு,சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுப்பொருட்களை விற்பனை செய்ய, பள்ளிகள் உகந்த இடம் அல்ல. பள்ளிகளில் உள்ள, 'கேன்டீன்'களை, வர்த்தக நோக்கில் நடத்தக்கூடாது.பள்ளி கேன்டீன்களில், சத்தான, ஆரோக்கியமான, சுகாதாரமான உணவுகளை வழங்கும் வகையில், கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.புரதச்சத்து, நார்ச்சத்து குறைவான, அதேநேரத்தில் சர்க்கரை, உப்பு, கொழுப்புஅதிகமுள்ள ஜங்க் உணவுப் பொருட்களையும், கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்களையும், பள்ளிகள், அவற்றை சுற்றி, 50 மீட்டர் துாரத்துக்குள்உள்ள பகுதிகளில் விற்க தடை விதிக்க வேண்டும்.இந்த நடவடிக்கையின் நோக்கம், பீட்சா, நுாடுல்ஸ்,பர்கர், இனிப்பு வகைகள், சிப்ஸ், கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை, பள்ளிக் குழந்தைகள் மிகக் குறைவாக நுகர வேண்டும் என்பது தான்.


நெறிமுறைகள் :


'ஜங்க் உணவுகளில், குழந்தைகளுக்கு தேவையான சத்துகள் சம அளவில் இல்லாததால், அவை, ஆரோக்கியத்துக்கு உகந்தவை அல்ல' என, என்.ஐ.என்., எனப்படும், தேசிய சத்து மையம் வகுத்த நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளில், குழந்தைகளின் பெற்றோர் கண்காணிப்பு இல்லாததால், ஜங்க் உணவு மீதான கட்டுப்பாடு அவசியம்.இவ்வாறு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., கூறியுள்ளது.


டில்லி ஐகோர்ட்டின் உத்தரவுப்படி, ஜங்க் உணவு வகைகள், பள்ளிகளில் விற்கப்படுவதை தடுக்கும் நெறிமுறைகளை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தயாரித்து விட்டதால், அடுத்த கட்டமாக, இத்தடை, விரைவில் நாடு முழுதும் அமல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி