"படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க?" - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2018

"படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க?"

ஐந்தாம் வகுப்பு 'அ' பிரிவு

மழை பெய்யா நாட்களிலும்
மஞ்சள் குடையோடு வரும்
ரோஜாப்பூ மிஸ்
வகுப்பின் முதல் நாளன்று
முன்பொரு முறை
எங்களிடம் கேட்டார்
"படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறீங்க?"


முதல் பெஞ்சை
யாருக்கும் விட்டுத் தராத
கவிதாவும் வனிதாவும்
"டாக்டர்" என்றார்கள்
கோரஸாக
இன்று
கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை
வரிசையில்
கவிதாவையும்;
கூந்தலில் செருகிய
சீப்புடன்
குழந்தைகளை
பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும்
எப்போதாவது
பார்க்க நேர்கிறது.

"இன்ஜினியர் ஆகப்போகிறேன்"
என்ற எல்.சுரேஷ்குமார்
பாதியில் கோட்டடித்து
பட்டுத் தறி
நெய்யப் போய்விட்டான்.

"எங்க அப்பாவுடைய
இரும்புக் கடையைப்
பாத்துப்பேன்"
கடைசி பென்ச்
சி.என்.ராஜேஷ்
சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.
இன்றவன்
நியூஜெர்சியில்
மருத்துவராகப்
பணியாற்றிக்கொண்டே
நுண் உயிரியலை
ஆராய்கிறான்.

"ஃபிளைட் ஓட்டுவேன்"
என்று சொல்லி
ஆச்சரியங்களில்
எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு
டி.ன்.பி.ஸ்.சி. எழுதி
கடைநிலை
ஊழியனானான்.

"அணுசக்தி
விஞ்ஞானியாவேன்"
என்ற நான்
திரைப் பாடல்கள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கையின் காற்று
எல்லாரையும்
திசைமாற்றிப் போட,
"வாத்தியாராவேன்"
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த
அதே பள்ளியில்
ஆசிரியராகப்
பணியாற்றுகிறான்.

"நெனைச்ச வேலையே
செய்யற,
எப்படியிருக்கு மாப்ளே?"
என்றேன்.

சாக்பீஸ் துகள்
படிந்த விரல்களால்
என் கையைப்
பிடித்துக்கொண்டு
"படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறீங்க?
என்று மட்டும்
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை! "
என்றான்.
கவிஞர்  நா.முத்துக்குமார்

1 comment:

  1. unmaithan. manavarkal nalai ennavai avarkal enpathu kalam than mudivu seiyum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி