தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர் தர்ணா: கலசபாக்கம் அருகே பரபரப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2019

தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர் தர்ணா: கலசபாக்கம் அருகே பரபரப்பு


கலசபாக்கம் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜாக்டோ- ஜியோ சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தமிழக அரசு, துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 46 ஆசிரியர்கள் பணியிட  மாற்றம் செய்யப்பட்டனர்.

அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம், கார்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன், போராட்டத்தில் கலந்து கொண்டதால், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அவரை, வேடந்தவாடி அரசு தொடக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள், தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மாணவர்களின் பெற்றோரும் திரண்டனர். தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கு பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் அருட்செல்வன், உதவி தொடக்க கல்வி அலுவலர் தேன்மொழி ஆகியோர், பள்ளிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர்.அப்போது மாணவர்கள், பெற்றோர் ‘தலைமை ஆசிரியர் அன்பழகன்  தனது சொந்த செலவில் பள்ளிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளார். அவர் வந்த பிறகுதான் பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது.

 எனவே, அவரை மீண்டும் இந்த பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், மாணவர்கள் தர்ணாவை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி