தொடங்கியது கோடை விடுமுறை: ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 14, 2019

தொடங்கியது கோடை விடுமுறை: ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு


பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வு சனிக்கிழமையுடன் முடிவடைந்ததால், ஞாயிற்றுக்கிழமை முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி ஏப்.12-ஆம் தேதிக்குள் அனைத்துப் பள்ளிகளின் ஆண்டு இறுதித் தேர்வுகளை விரைந்து முடிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதிக்குள் இறுதித் தேர்வுகளை முடிக்க வேண்டும் என கல்வித்துறைஉத்தரவிட்டது.அதன் அடிப்படையில் அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்று வந்தது. பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை மாலை வரை செயல்பட்டன. இந்த வகுப்புகளுக்கு சனிக்கிழமை முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோன்று 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை வரை தேர்வுகள் நடைபெற்றன.இதுதவிர பெரும்பாலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தேர்வுகள் கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பாக நிறைவடைந்தன. ஒருசில பள்ளிகள் வரும் திங்கள்கிழமை வரை செயல்படுகின்றன.

வழக்கமாக மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு 40 நாள்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 30 நாள்களும் விடுமுறை கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 50 நாள்களுக்கும் மேலாக கோடை விடுமுறை கிடைத்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித் துறை எச்சரித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்குஇப்போதே சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடும் தனியார்பள்ளிகள் குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை உறுதி என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி