நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி படிப்புகளுக்கு சேர்க்கை: யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துக்கு பிளஸ் 2 மதிப்பெண் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2019

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி படிப்புகளுக்கு சேர்க்கை: யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துக்கு பிளஸ் 2 மதிப்பெண்


சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ் தெரிவித்தார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யுனானி மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி (100), மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (50 இடங்கள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்) என 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இதேபோல 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் இருக்கின்றன.இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுர்வேத, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH - பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வுமதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

ஒரு படிப்புக்கு நீட் இல்லை

இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் கணேஷிடம் கேட்டபோது, “யோகா மற்றும்இயற்கை மருத்துவ பட்டப்படிப்புதவிர மீதமுள்ள 4 பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துக்கு தனியாக கவுன்சில் இல்லாததால், அந்த பட்டப்படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வை கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஆனால், நீட் தேர்வு தொடர்பான திருத்தங்களை இந்திய மருத்துவ முறை குழுமம் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.இந்த ஆண்டு நாடுமுழுவதும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே ஆயுஷ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும். பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.நீட் தேர்வு தொடர்பான தேவையான திருத்தங்களைஇந்திய மருத்துவ முறை குழுமம் செய்துவிட்டது. அதனால், வேறுவழியின்றி தமிழகத்தில் ஆயுஷ்படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர் பாதிப்பு

நீட் தேர்வு முடிந்துவிட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. தற்போது ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளதால், ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதாத மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாணவர்கள், அவர்களின் பெற்றோரிடம் கேட்டபோது, “கடந்த ஆண்டு ஆரம்பத்திலேயே ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், விண்ணப்ப விநியோகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு, ஆயுஷ்படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழகஅரசு அறிவித்தது. இதனால், நீட்தேர்வுக்கு கஷ்டப்பட்டு படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று நினைத்து பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை. தமிழக அரசும் எந்த ஒரு தெளிவான முடிவையும் தெரிவிக்கவில்லை.இந்நிலையில், விண்ணப்ப விநியோகம் தொடங்க உள்ள நிலையில் ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்திருப்பது என்ன நியாயம். தமிழக அரசைநம்பி இருந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது” என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி