சிறுபான்மை பள்ளி மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத3 ஆண்டுகளுக்கு விலக்கு ஐகோர்ட்டு உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2019

சிறுபான்மை பள்ளி மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத3 ஆண்டுகளுக்கு விலக்கு ஐகோர்ட்டு உத்தரவு!


மொழிவாரி சிறுபான்மை பள்ளி மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டுஉத்தரவிட்டது.

தமிழ் கட்டாயம்

தமிழக அரசு 2006-ம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டுவந்ததன் மூலம் அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிறமொழி பள்ளி மாணவர்களும் பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.2006-ம் ஆண்டு 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் 2016-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டியிருந்தது. அப்போது, மொழிவாரி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் இந்த சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இதில் ஐகோர்ட்டு, தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.

முழு அமர்வு

இந்த நிலையில், வருகிற கல்வியாண்டிலும் தமிழ் தேர்வை எழுத விலக்கு கேட்டும், மொழி பாடங்களை தாய் மொழியிலேயே முதல் பாடமாக கொண்டு தேர்வு எழுத அனுமதி கேட்டும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், அப்துல் குத்தூஸ், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட முழு அமர்வு விசாரித்தது.அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், அரசு வக்கீல் கே.கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

3 ஆண்டுகளுக்கு விலக்கு

தமிழக அரசு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை 2006-ம் ஆண்டு கொண்டுவந்தாலும், அதுதொடர்பான விதிகளை 2012-ம் ஆண்டுதான் வெளியிட்டது. எனவே 2012-ம் ஆண்டில் இருந்து இந்த விதிகள் அமலுக்கு வருகிறது. அதன்படி 2012-ம் ஆண்டு 1-ம் வகுப்பில் சேர்ந்தவர்கள் 2023-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்போதுதான் அவர்கள் கட்டாயம் தமிழ் தேர்வு எழுத வேண்டும்.எனவே, மொழிவாரியான சிறுபான்மை பள்ளி மாணவர்கள் 2022 மார்ச் மாதம் வரை (3 ஆண்டுகளுக்கு) தமிழில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி