பணியிடை நீக்கம் செய்தாலும் ஜீவனப்படி வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2020

பணியிடை நீக்கம் செய்தாலும் ஜீவனப்படி வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!


பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்குரிய  ஜீவனப்படி வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தில் உள்ள தனிநபர்  வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை  மீறிய செயல் - சென்னை உயர் நீதிமன்றம்

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள ஜமீன் இளம்பள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயலாளராக பணியாற்றிய இளங்கோ என்பவர், கையாடல் குற்றச்சாட்டு காரணமாக, பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் தனக்கு ஜீவனப்படி வழங்கக் கோரி இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜீவனப்படி வழங்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், ஜமீன் இளம்பள்ளி கூட்டுறவு வங்கி தலைவர் உள்ளிட்டோர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது, கூட்டுறவு சங்கச் செயலாளர் ஊழியர் அந்தஸ்துக்குள் வராததால், அவருக்கு ஜீவனப்படி வழங்க முடியாது என, கூட்டுறவு சங்க விதிகளையும், தமிழக அரசின் ஜீவனப்படி தொடர்பான சட்டப் பிரிவுகளையும் சுட்டிக் காட்டி மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.  பணியிடைநீக்க காலத்தில் வாழ்க்கையை நடத்துவதற்காக வழங்கும் ஜீவனப்படியை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தை மீறுவதைப்போன்றது என, செயலாளர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசின் சட்டத்தின் கீழும், கூட்டுறவு சங்க விதிகளின் கீழும், செயலாளரை ஊழியராகக் கருத முடியாது என்றபோதும், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியரின் ஜீவனப்படியை முழுமையாக மறுப்பதென்பது, அரசியல் சாசனத்திலுள்ள தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் எனச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், ஜீவனப்படி கோரி இளங்கோ அளித்த மனுவை ஆறு வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும்படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

1 comment:

  1. naadu naasama poga karanangal,
    oru arasu ooliyan oolal panna avana onnume panna mudiyathu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி