தன்னார்வலர்கள் , தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் வழங்க எந்த தடையும் இல்லை - தமிழக அரசு விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2020

தன்னார்வலர்கள் , தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் வழங்க எந்த தடையும் இல்லை - தமிழக அரசு விளக்கம்!



செய்தி வெளியீடு

தன்னார்வலர்கள் , தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் வழங்க எந்த தடையும் இல்லை , வழிமுறைகளில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விளக்கம்

சுனாமி , பெரு வெள்ளம் , ஒகி புயல் , வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்களின் வீடுகள் , தினசரி உபயோகப் பொருட்கள் , வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனையான காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானது . அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து பாராட்டியதே தவிர , நிவாரணம் வழங்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை.

 அப்போதைய சூழ்நிலையில் , பொது மக்கள் கூடுவதற்கு எந்த ஒரு தடை உத்தரவும் கிடையாது . ஆனால் தற்போது , இந்த பேரிடர் , கொடிய வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ளது , இதன் விளைவுகளை எல்லோரும் அறிவோம் . இந்தத் தொற்று யாரிடம் உள்ளது , அது எப்போது , யாருக்கு யார் மூலம் பரவும் என தெரியாத நிலையில் , நோய்த் தொற்றினை தவிர்க்க வேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தில் தான் , கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் , இயல்பான நகர்வுகளுக்கும் , தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் , தன்னார்வலர்களும் , தொண்டு நிறுவனங்களும் , தனிப்பட்ட முறையில் உதவி செய்பவர்களும் , நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் , அதே சமயம் நோய்த் தொற்று பரவுவதை தவிர்க்கவும் , முறையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் . எனவே , புயல் , வெள்ளம் , வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் உதவுவது போல தற்போது உதவி செய்ய ஆரம்பித்து விட்டால் , நோய்த் தொற்று தான் அதிகமாகும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள் .

அதனால் தான் எந்த ஒரு அமைப்பு நிவாரணம் வழங்கினாலும் , அதை முறையாக வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடமோ , மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமோ , மண்டல அலுவலர்களிடமோ , நகராட்சியாக இருந்தால் அந்தந்த நகராட்சி ஆணையரிடமோ , பேரூராட்சியாக இருந்தால் , செயல் அலுவலரிடமோ , ஊராட்சி ஒன்றியமாக இருந்தால் , வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ வழங்கலாம் .

மேலும் , இத்தகைய உதவிகளை செய்ய சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளையும் அணுகலாம் . இதை விநியோகப்பதற்கென அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையான அனைவருக்கும் சென்றடையும் வகையிலும் , தன்னார்வ அமைப்புகள் வழங்கும் மளிகைப் பொருட்கள் , காய்கறிகள் , சமைத்த உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை அவர்கள் குறிப்பிடும் பகுதிகளுக்கு , அல்லது குறிப்பிடும் நபர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் .

அரசின் முழு விளக்கத்தைக் காண
Click here to view pdf

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி