மாயமானவர் இறந்ததாக யூகித்து மனைவிக்கு பணப்பலன் வழங்க உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2020

மாயமானவர் இறந்ததாக யூகித்து மனைவிக்கு பணப்பலன் வழங்க உத்தரவு!


மாயமான சுகாதார ஆய்வாளர் இறந்து விட்டதாக யூகித்து, அவரது மனைவிக்கு, சட்டப்பூர்வ பணப் பலன்கள் வழங்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், டி.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்தவர் நடராஜன்.
இவர், 2003 மே 2ல் மாயமானார்.
10 ஆண்டுகளாகியும், அவரை பற்றி தகவல் இல்லாததால், 2013ல், அவரை பணி நீக்கம் செய்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

அவரது மனைவி பொன்னி, 'என் கணவர் மாயமாகி விட்டதால், சட்டப்பூர்வ பணப் பலன்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்றக் கிளையில், மனு தாக்கல் செய்தார்.

தனி நீதிபதி, 'மனுதாரரின் கணவர், 1982 முதல் 2003 வரை பணிபுரிந்துள்ளார். அவர் இறந்து விட்டதாக யூகித்து, அவருக்குரிய சட்டப்பூர்வ பணப் பலன்களை, மனைவிக்கு வழங்க வேண்டும்' என, 2018ல் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, பொது சுகாதாரத்துறை செயலர், இயக்குனர் மேல்முறையீடு செய்தனர்.

இதை விசாரித்த, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு:
நடராஜனை பணி நீக்கம் செய்து, 'எக்ஸ் பார்ட்டி'யாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக, 2020 மார்ச் 13ல், பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம், பொன்னி பணப்பலன்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான தடை விலகியுள்ளது.
நடராஜனை இறந்தவராக கருத முடியாது.

ஆனால், இந்திய சாட்சியச் சட்டப் பிரிவின்படி, ஏழு ஆண்டுகளுக்கு மேல் மாயமான ஒருவரை, யூகத்தின் அடிப்படையில், இறந்தவராக கருதலாம்.
இவ்வழக்கில், நடராஜன், 2003ல் மாயமாகி விட்டார்.

அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற போலீசாரின் சான்று பெற்று, பொது சுகாதார இயக்குனரிடம், உத்தரவாத பத்திரத்தை, பொன்னி தாக்கல் செய்ய வேண்டும்.
அதனடிப்படையில், அவருக்கு சட்டப்பூர்வ பலன்களை வழங்க வேண்டும்.

ஒருவேளை, நடராஜன் உயிருடன் வரும் பட்சத்தில், பொன்னியிடம் உள்ள சொத்துகளை மீட்க, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம்.
அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி