உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி - ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2020

உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி - ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம்.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களுக்கு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாற்றுப் பணி வழங்க எதிர்ப்புத் தெரிவித்து, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (டிச.30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர், அங்கு ஆசிரியர்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மாற்றுப் பணி வழங்கப்பட்டது.


இதற்கு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் அரசு இதற்குச் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து அவர்கள் அரசுக் கல்லூரிகளில் பணியில் சேர்ந்தனர். பல ஆண்டுகளாகக் கவுரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வந்தவர்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதிகளுடன் காத்திருந்தவர்களின் பணி வாய்ப்பும் கேள்விக்குறியானது.


இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைத் துறையில் பணியாற்றி வரும் உபரி ஆசிரியர்களுக்கு, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாற்றுப் பணி வழங்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்பவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:


“அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைத் துறையில் பணியாற்றும், 59 உபரி ஆசிரியர்களை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மாற்றுப் பணி அளிப்பதற்கு உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அறிகிறோம்.




இதற்காக வேளாண்மைப் பல்கலைக்கழகத் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை, உயர் கல்வித்துறை கோரியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்புக்காக சுமார் 2,500 பேர் காத்திருக்கிறோம். குறைந்த ஊதியத்தில் தனியார் வேளாண்மைக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிறோம்.




அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களுக்கு அளிக்க உள்ள வாய்ப்பு எங்களுக்கானது. உயர் கல்வித்துறையின் இந்த முடிவால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவோம். 2013-ம் ஆண்டுக்குப் பிறகு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்குப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரிப் பேராசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கும் முடிவைக் கைவிட்டு, அப்பணியிடங்களுக்குத் தகுதியுள்ள எங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், வேலைவாய்ப்புத் தேர்வு நடத்தப்பட வேண்டும்’’.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தரப்பில், “அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு, இப்பல்கலைக்கழகத்தில் மாற்றுப் பணி வழங்குவது குறித்து அரசிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை. உங்கள் பிரச்சினை குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்” என்று விளக்கம் அளிக்கப்பட்டவுடன், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி