விரைவில் பள்ளிகள் திறப்பு?- அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மும்முரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2021

விரைவில் பள்ளிகள் திறப்பு?- அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மும்முரம்.



தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற சூழலில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், பள்ளிகளைத் திறந்து வகுப்புகளை நடத்தலாமா என்று அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.




கடந்த நவ.16-ம் தேதி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்ட நிலையில், நவ.14-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்குப் பின்னர் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தால், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் எழுந்த கடும் எதிர்ப்புக் காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி பொங்கல் விடுமுறைக்குப் பின்னர், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்தலாமா? என்று பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி மற்றும் பள்ளி தூய்மைப் பணியாளர்கள் இன்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதுடன் குப்பைகள் அகற்றப்பட்டன. தனிமனித இடைவெளியோடு இருக்கைகள் அமைக்கப்பட்டன. கழிப்பறைகளும் சுத்தம் செய்யப்பட்டன. இதேபோல சென்னை, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சுகாதாரப் பணிகள் நடைபெற்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி