பள்ளி இடைநின்ற மாணவர்களை கணக்கெடுக்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2021

பள்ளி இடைநின்ற மாணவர்களை கணக்கெடுக்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

 


பள்ளி இடைநின்ற மாணவர்களை அடையாளம் காண தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


மதுரை கோமஸ்பாளையம் முத்துச்செல்வம் தாக்கல் செய்த பொதுநல மனு:தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி 2017-18 ல் தமிழகத்தில் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு இடைநின்ற மாணவர்கள் 6 முதல் 14 வயதிற்குட்பட்டோரில் 38 ஆயிரத்து 362 பேர். அரசுத் தரப்பில் முறையாக ஆய்வு செய்யாததால் புள்ளி விபரங்கள் மாறுபடுகின்றன.


கொரோனாவால் 2020 மார்ச்சிலிருந்து பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. குடும்ப ஏழ்மையால் பல மாணவர்கள் வேலைக்குச் சென்றனர். ஊரடங்கு நிபந்தனை தளர்வால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் நடக்கின்றன.பள்ளி இடைநின்ற 6 முதல் 18 வயதிற்குட்பட்ட மாணவர்களை கிராமம், நகரங்களில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அடையாளம் காண வேண்டும்.


வீடுகள் தோறும் பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி நிர்வாகங்களின் உதவியுடன் அப்புள்ளி விபரங்களை பாதுகாத்து, அவ்வப்போது மேம்படுத்த வேண்டும். 6 முதல் 18 வயதுடைய மாணவர்கள் பள்ளிப் படிப்பை தொடராமல் இடைநிற்பதை தடுக்க வேண்டும். இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு முத்துச்செல்வம் குறிப்பிட்டார்.


நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளர், தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மார்ச் 5 க்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி