அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி: மாற்றுத்திறனாளி பணியாளர்கள்அலுவலகம் வர வேண்டாம்: தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2021

அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி: மாற்றுத்திறனாளி பணியாளர்கள்அலுவலகம் வர வேண்டாம்: தமிழக அரசு உத்தரவு.



அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50% பேர் அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும். மேலும் குரூப் ஏ பிரிவு அரசு அதிகாரிகள் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும். மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அனைத்து கடைகளையும் இரவு 9 மணிக்குள் மூடிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி வெளியில் யாராவது வாகனங்களில் வந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், தமிழகத்தில் தேர்தல் முடிந்து புதிய அரசு நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ளது. அதே நேரத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அது நாளை அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி நாளை காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் பஸ்கள், வாடகை ஆட்டோக்கள், கார்கள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் நாளை முதல் வரும் 20-ம் தேதி வரை அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி