அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் குறித்து -வீட்டு வசதித் துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2021

அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் குறித்து -வீட்டு வசதித் துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு.

 

தனது வாழ்நாளில் ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது அரசுப் பணியாளர்களின் கனவாகும் . அரசுப் பணியாளர்களின் இக்கனவை நனவாக்கும் வகையில் , அரசு , ஒரு நலத்திட்டமாகப் பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கும் , கட்டிய வீடு / அடுக்குமாடி குடியிருப்பினை வாங்குவதற்கும் " வீடு கட்டும் முன்பணத்தினை " வழங்குகிறது.


4.1 இம்முன்பணம் 4 ஆண்டுகள் முறையான பணி மற்றும் நுழைவுப் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்த அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது . இம் முன்பணம் அனைத்திந்தியப் பணி அலுவலர்களுக்கு ரூ .60 லட்சமும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு ரூ .40 லட்சமும் கடனாக அவர்களின் ஊதியத் தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது . இவ்வீடு கட்டும் முன்பணத்தில் , 50 விழுக்காடு மனையிடம் வாங்குவதற்கும் மீதமுள்ள 50 விழுக்காடு அம்மனையில் , வீடு கட்டவும் வழங்கப்படுகிறது . வீடு கட்டும் முன்பணத்தின் மூலம் கட்டப்பட்ட வீட்டை மேம்படுத்தவும் , விரிவாக்கவும் மேற்காண் கடன் தொகையின் தகுதியுள்ள முன்பணத்தில் 50 விழுக்காட்டை வீடு கட்டும் முன்பணத்தின் மொத்த வரம்பிற்குட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.


4.2 தற்போது இப்பிரிவின்கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சென்னையில் நெற்குன்றம் பகுதியில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி குடியிருப்பினை வாங்க அனைத்திந்தியப் பணி அலுவலர்களுக்கு ரூ .20 லட்சமும் அரசுப்பணியாளர்களுக்கு ரூ .10 லட்சமும் கூடுதல் கடனாக அனுமதிக்கப்படுகிறது.


4.3 அரசுப் பணியாளர்களது நலனையும் அவர்களது வட்டி சுமையைக் கருத்தில் கொண்டும் வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களில் வீடுகட்ட கடன் பெற்றிருக்கும் தொகையை அரசின் வீடுகட்டும் முன்பணமாக மாற்றிக் கொள்ளும் நடைமுறையை அரசு சிலவிதிமுறைகளுடன் தற்போது அனுமதித்துள்ளது.


4.4 வீடுகட்டும் முன்பணத் தொகையானது முதலில் 180 தவணைகளில் அசல் முழுவதும் பிடித்தம் செய்யப்பட்டு பின்னர் 60 தவணைகளில் வட்டி பிடித்தம் செய்யப்படும் . இக்கடன் தொகைக்கான வட்டி , மாதாந்திர நிலுவைத் தொகைக் குறைவின் ( Monthly diminishing balance ) அடிப்படையில் , ஒவ்வொரு மாத இறுதியில் ,நிலுவையாக உள்ள தொகைக்கு படிவீத முறைப்படி ( Slabrates ) கணக்கிடப்படுகிறது.


4.5 வீடுகட்டும் முன்பணம் பெற்ற ஓர் அரசு ஊ பழியர் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் அந்த அரசு ஊழியரின் குடும்பத்துக்கு உதவி செய்யும் வகையில் , " அரசுப் பணியாளர் வீடுகட்டும் முன்பண சிறப்பு குடும்ப சேமநல நிதித் திட்டம் " என்னும் இணையற்ற திட்டத்தை அரசு வகுத்துள்ளது . இதன்படி , வீடுகட்டும் முன்பணம் பெறும் அனைத்து அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் , மாதாந்திர தவணைத் தொகையில் 1 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும். இத்தொகையானது , அரசால் தனி நிதியாக பராமரிக்கப்படுகிறது . இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ள ஓர் அரசு ஊழியர் பணியிலிருக்கும்போது இறக்க நேரிட்டால் , பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அவரது கணக்கில் நிலுவையிலுள்ள வீடு கட்டும் முன்பண அசல் மற்றும் வட்டித் தொகை இந்நிதியிலிருந்து ஈடு செய்து கொள்ளப்படும்.


4.6 நடப்பு நிதியாண்டில் , வீடுகட்டும் முன்பணம் அளிப்பதற்காக திருத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ .160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இது தவிர , தலைமைச் செயலகப் பணியாளர்கள் மற்றும் அனைத்திந்தியப் பணி அலுவலர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் வழங்குவதற்கு ஏதுவாக , தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் தனித் தனியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Housing Loan Announcement Press News - Download here...


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி