பள்ளி மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் தற்போதைய சூழலில் எவ்வாறு அமையப்பெற வேண்டும் ? -ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2021

பள்ளி மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் தற்போதைய சூழலில் எவ்வாறு அமையப்பெற வேண்டும் ? -ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு.

 

பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் : ( 31.08.2021 ) 


 கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு திறக்கப்படுவதால் மாணவர்களின் சமூக , பொருளாதார நிலை , உடல் நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு பள்ளி மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் பின்வருமாறு அமையப்பெற வேண்டும்


 இடைநின்ற மாணவர்களை இனங்கண்டறிதல் , பள்ளிகளில் மீளச் சேர்த்தல் : 


1. பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிய மென்பொருள் செயலி உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

2. EMIS துணையுடன் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள மாணவர்கள் இனங்கண்டறியப்பட்டு வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. GIST உதவியுடன் இயங்கும் மென்பொருள் இதற்கென தனியே உருவாக்கப்பட்டு மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்தம் வயதுக்கேற்ற வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள மாணவர்களும் ஓரிரு வாரங்களில் கணக்கெடுக்கப்பட்டு அருகாமையிலுள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுதல் வேண்டும். 

3. பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் இடைநின்ற மாணவர்கள் , நீண்ட நாள்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் மீண்டும் கண்டறியப்பட்டு பள்ளிகளில் விரைவில் சேர்க்கப்படுதல் வேண்டும்.


பள்ளி திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் : 


1. பள்ளிகள் திறப்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

2. இக்கடிதத்தில் விரும்பும் பள்ளிகள் மாணவர்கள் இணையவழிக் கல்வியை தொடரலாம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. இப்பொருள் குறித்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு நடத்தப்பட்ட கூட்டத்திலும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

4. அரசுப்பள்ளி மாணவர் உள்ளிட்ட அனைத்து மாணவர்களின் பெற்றோரிடமிருந்தும் மாணவர்கள் பள்ளிக்கு அனுப்புவது குறித்து ஒப்புதல் தெரிவித்து கடிதம் ஒன்றை கேட்டுப் பெறவேண்டும். 

இணக்கமான கற்றல் கற்பித்தல் சூழலை ஏற்படுத்துதல் :


1. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருகைபுரியும் மாணவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பின்னடைவை சந்திந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே , முதலில் தேரடியாக பாடத் திட்டத்தை பயிற்றுவிக்காமல் மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிவதை இணக்கமான சூழ்நிலையுடன் பாதுகாப்பான நிகழ்வாக உணரச்செய்ய வேண்டும்.

2. பாடப்புத்தகங்களுக்கு வெளியில் பொதுவான நாட்டு நடப்புகள் குறித்து பேசுதல் , மாணவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள ஊக்குவித்தல் , வினாடி - வினா போன்று மாணவர் பங்குபெறுவதை உறுதி செய்யும் செயல்பாடுகளை செய்ய வேண்டும்.

3. சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி அவர்களும் வகுப்பறைச் சூழலில் இணக்கமான சூழ்நிலையில் கற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். 


மாணவர் உடல் நலனும் மன நலனும் 


1. பள்ளி திறந்தவுடன் சுகாதாரத் துறையின் ஒத்துழைப்புடன் அனைத்துப் பள்ளிகளுக்கும் மருத்துவர் குழு நேரில் பார்வையிட்டு மாணவர்களின் உடல் நலன் குறித்த மருத்துவப் பரிசோதனை செய்தல் வேண்டும். தேவைப்படும் மாணவர்களுக்கு தொடர் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. மாணவர்களுக்கு மனநலன் தொடர்பான ஆலோசனைகளும் தேவைக்கேற்ப வழங்கப்படுதல் வேண்டும். 


புத்தாக்கப் பயிற்சி : 


1. பெருந்தொற்றின் காரணமாக மாணவர்களின் கற்றல் அடைவு நிலைகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2. இக்குறைபாட்டை சரிசெய்வதற்கென பள்ளிகள் திறந்த முதல் இரு மாதங்களுக்கு புத்தாக்கப்பயிற்சி நடத்தப்படவேண்டும்.

3. புத்தாக்கப்பயிற்சி கட்டகங்கள் தயாரிக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

4. இக்கட்டகங்கள் கடந்த பதினெட்டு மாதங்களாக மாணவர் பெற்றிருக்க வேண்டிய முக்கியமான சுற்றல் நிலைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளன.

5. சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தமது பாடம் தொடர்பான பயிற்சிக் கட்டகத்தை நகல் எடுத்து கற்றல் கற்பித்தலுக்கு ஏதுவாக வைத்திருக்க வேண்டும்.


கல்வி இணைச்செயல்பாடுகள் : 


1. புத்தாக்கப் பயிற்சியுடன் சேர்த்து கல்வி இணைச் செயல்பாடுகளான , புத்தகம் வாசித்தல் , கட்டுரை எழுதுதல் , ஓவியம் வரைதல் போன்ற படைப்பாற்றல் வெளிப்படும் செயல்களில் ஈடுபடுத்தவேண்டும். இச்செயல்பாடுகளுக்கென பள்ளிக்கால அட்டவணையில் தனியே பாடவேளைகளை ஒதுக்கிட வேண்டும்.

 2. பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்கள் பெற்றுள்ள தனித்திறன்களை கேட்டறிந்து பாராட்டவும் , ஊக்குவிக்கவும் வேண்டும். 

3. தலைமைப் பண்புகளை வளர்க்கும் வண்ணம் தனியே பாடவேளைகளை ஒதுக்கி மேடைப்பேச்சு போன்ற செயல்பாடுகளில் ஒவ்வொரு மாணவனும் பங்கேற்கச் செய்யவேண்டும். 


மாணவர்களை கற்றல் கற்பித்தல் : 


ஒவ்வொரு மாணவரின் கற்றல் நிலையைத் தெரிந்து கொண்டு அதற்குத் தேவையான நிலையில் கற்றல் கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.


 பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெறுதல் : 


1. தக்க கால இடைவெளியில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் கூட்டமும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டமும் பெருந்தொற்றுக் கால நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட வேண்டும்.

2. பள்ளி செயல்படத் தொடங்கியவுடன் மாணவர்களின் வருகை , உடல் நலம் , அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் , பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் , கற்றல் அடைவு முதலான தகவல்கள் மாணவனது பெற்றோரிடம் குறுந்தகவல்களாக பகிரப்படுதல் வேண்டும். 


- தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையர்





No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி