நீட் தேர்வு எழுதிய மாணவிக்கு விடைத்தாளை காட்ட உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2022

நீட் தேர்வு எழுதிய மாணவிக்கு விடைத்தாளை காட்ட உத்தரவு

 

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 'நீட்' தேர்வை எழுதிய மாணவிக்கு, அசல் விடைத்தாளை காட்டும்படி, தேசிய தேர்வு முகமைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறிஸ்மா விக்டோரியா என்பவர் தாக்கல் செய்த மனு:மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வை எழுதினேன். என் மதிப்பெண்ணை சரிபார்க்க வேண்டியுள்ளது. விடைத்தாள் சரியாக மதிப்பிடப்பட்டு, மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். அதனால், அசல் விடைத்தாளை வழங்கும்படி, தேசிய தேர்வு முகமைக்கு மனு அனுப்பினேன். அதை பரிசீலித்து, அசல் விடைத்தாளை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் ஆஜரானார். தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அசல் விடைத்தாளை பார்க்க வேண்டும் என்றால், டில்லி, நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமைக்குச் செல்ல வேண்டும். அங்கு, விடைத்தாள் காட்டப்படும்' என்றார்.இதையடுத்து, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:டில்லியில் உள்ள தேசிய தேர்வு முகமைக்குச் செல்ல மனுதாரர் தயாராக உள்ளார். தேதியை உறுதி செய்து, மனுதாரருக்கு தெரிவித்தால், அவர் டில்லி பயணிக்க வசதியாக இருக்கும்.


எனவே, தேசிய தேர்வு முகமை அலுவலகம் வருவதற்கு, 10 நாட்களுக்குள் ஒரு தேதியை உறுதி செய்து, முன்கூட்டி தகவல் தெரிவிக்க வேண்டும். இ - மெயில் வாயிலாகவும், தேர்வு முகமை வழக்கறிஞர் வாயிலாகவும், மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும். தேதி தெரிவிக்கப்பட்ட பின், அந்த தேதி, நேரத்தில், தேசிய தேர்வு முகமைக்கு செல்லலாம். அங்கு, அசல் விடைத்தாளை மனுதாரருக்கு காட்ட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி