புதுச்சேரி அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2023

புதுச்சேரி அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்

 புதுவைக்கு தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.


கடந்த 2011-ல் என்.ஆர்.காங்., அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற் கொண்டது. 2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட் டம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.


இவ்வாறு கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் 5-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 6-ம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் விரிவாக்கப்படவில்லை.


இந்த கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி கேட்டு, புதுவை பள்ளிக் கல்வித்துறை சார்பில், மத்தியஇடைநிலை கல்வி வாரியத்திற்கு விண்ணப்பித் திருந்தது.


இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "சிபிஎஸ்இ பாடத்திட்டம் தற்போது ஒன்றாம் வகுப்புமுதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இத்திட்டம் வரும் கல்வியாண்டில் 6 முதல் 9-ம் வகுப்பு மற்றும்11-ம் வகுப்பில் தொடங்கப்படும். 10, 12-ம் வகுப்பு களில் அடுத்த கல்வியாண்டு அமலாகும்.


சிபிஎஸ்இ பாடத்திட்டம் இருந்தாலும் தேசியக் கல்விக் கொள்கைப்படி தமிழ் பாடம் கண்டிப்பாக உண்டு. இந்தி கட்டாயமில்லை. தேசிய கல்வி கொள்கைப்படி 18 மொழிகளை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.


கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, "புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் சிபிஎஸ்இ இணைப்புக்கு சாராஸ் போர்ட்டல் சாளரத்தில் விண்ணப்பிக்க தெரிவித்திருந்தோம். அரசுப் பள்ளிகள் அனைத்தும் விண்ணப்பித்தன. தற்போது 128 அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடங்க அனுமதி கிடைத்துள்ளது" என்றனர்.


இதுபற்றி கல்வித் துறைச் செயலர் ஜவகரிடம் கேட்டதற்கு, "தற்போது உள்ள ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்துக்கு ஏற்ப பயிற்சி தரப்படுகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்த உடன் மாணவர்கள் ஒவ்வொருவரின் விவரமும் தனித்தனியாக ஆராயப்படும். முக்கியமாக ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களின் விவரங் களை கண்காணிப்போம். ஒரு பள்ளியில் மாணவர் மதிப்பெண் குறைந்தால் விவரத்தை கேட்டறிய முடியும்.


வரும் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். அதற்கு அடுத்த கல்வி யாண்டில் மீதமுள்ள 10, 12-ம் வகுப்புகளில் நடை முறைப்படுத்தப்பட்டு முழுமையாக அனைத்து அரசுப் பள்ளிகளும் சிபிஎஸ்இ ஆகும்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி