புதுச்சேரி முதல்வரின் வீட்டை முற்றுகையிட்ட ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2023

புதுச்சேரி முதல்வரின் வீட்டை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்


புதுச்சேரியில் இடமாற்றல் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அரசின் கல்வித் துறையில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட புதுவையைச் சேர்ந்த ஆசிரியர்கள் காரைக்கால் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் காரைக்காலில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர்கள் தங்களை மீண்டும் சொந்த பிராந்தியமான புதுச்சேரிக்குப் பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் கல்வித்துறை, கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய பணியிட மாறுதல் கொள்கையை வெளியிட்டது.

இதற்கு ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பணி மூப்பு அடிப்படையில்தான் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். புதிய இடமாற்றல் கொள்கையில் முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை வளாகத்தில் நேற்று முன்தினம் ஒன்று கூடி, பணியிட மாறுதல் விவகாரத்தில் சம்மேளனமும், கூட்டமைப்பும் இணைந்து, கூட்டாக போராட்டக் குழுவை உருவாக்கி போராடுவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதனிடையே நேற்று (ஜூன் 25) கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயில் வளாகத்தில் உள்ள முதல்வர் இல்லத் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்று திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, பணிமூப்பு அடிப்படையில்தான் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் நேரில் வலியுறுத்தினர். அதற்கு, கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்து பேசும்படி முதல்வர் கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அவர்கள் இன்று (ஜூன் 26) கல்வித் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேச உள்ளதாகத் தெரிவித்தனர்.

2 comments:

  1. மேலே கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தில் ஒன்று கவனியுங்கள், அதில் இருப்பவர்கள் எல்லாருமே ஆசிரியர்கள் எனும்போது ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக உள்ளதே.

    ஆசிரியர் வேலைக்குச் செல்வது ஆண்மைக்கு இழுக்கு என்கிற காலம் வந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்து தவறுங்க. போட்டா எடுத்தவங்க பெண்கள் இருக்கும் திசை நோக்கி எடுத்திருக்கலாம் இல்லைனா பல போட்டோக்களில் பெண்கள் தோன்றும் புகைப்படம் கொடுத்திருக்கலாம்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி