TNPSC உறுப்பினராக ஐந்து பேர் புதிதாக நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2024

TNPSC உறுப்பினராக ஐந்து பேர் புதிதாக நியமனம்

டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி உட்பட, ஐந்து பேர் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு, ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள், கவர்னர் ஒப்புதலுடன், தமிழக அரசால் நியமிக்கப்படுகின்றனர். சமீப காலமாக, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் இல்லாமல், நான்கு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. உறுப்பினர் முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபுவையும், உறுப்பினர்களாக சிலரையும் நியமிக்க, முதல்வர் கவர்னருக்கு பரிந்துரை செய்தார். டி.என்.பி.எஸ்.சி., தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்க கோரும் கோப்பை, கவர்னர் நிராகரித்து விட்டார்.


இதுதொடர்பாக, தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் மோதல் இருந்த நிலையில், நேற்று புதிதாக ஐந்து பேரை, கவர்னர் ஒப்புதலுடன், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவனருள்; ஐ.ஆர்.எஸ்., அதிகாரி சரவணகுமார்; டாக்டர் தவமணி; உஷா சுகுமார்; பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.சிவனருள் திருப்பத்துார் மாவட்ட கலெக்டராக இருந்தவர். அதன்பின் பத்திரப்பதிவுத்துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். உறுப்பினர் உஷா சுகுமார், எமர்ஜென்சி காலத்தில், முதல்வர் ஸ்டாலினுடன் சிறையில் இருந்து சித்ரவதைக்கு உள்ளான மேயர் சிட்டிபாபுவின் மருமகள்.ஐ.ஆர்.எஸ்., அதிகாரி சரவணகுமார், சேலத்தை சேர்ந்தவர். இவரது மனைவி கூட்டுறவுத் துறையில் இணைப் பதிவாளராக பணியாற்றுகிறார். பிரேம்குமார் கோவை ஸ்ரீ நாராயண குரு மேலாண்மை கல்வி நிறுவன முதல்வராக உள்ளார். பெண் மருத்துவர் தவமணி, முதல்வரின் கொளத்துார் தொகுதியை சேர்ந்தவர்.இவர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து, ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயது நிறைவு ஆகியவற்றில் எது முந்தையதோ, அதுவரை பதவியில் இருப்பர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, இன்னும் தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி