கல்வித்துறையை கலங்கடிக்கும் இரண்டாம் எமிஸ்: ஆசிரியர்கள் அப்செட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2024

கல்வித்துறையை கலங்கடிக்கும் இரண்டாம் எமிஸ்: ஆசிரியர்கள் அப்செட்

கல்வித்துறையில் ஏற்கனவே 'எமிஸ்' இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய நுாற்றுக்கும் மேற்பட்ட தகவல் விபரம் பதிவேற்றங்களால் ஆசிரியர்கள் கடும் எரிச்சலில் உள்ளனர். இந்நிலையில் 'யுடைஸ் பிளஸ்' (யுனிபைர்டு டிஸ்ட்ரிக்ட் இன்பர்மேஷன் பார் எஜூகேஷன்) என்ற செயலியில் மாணவர்கள் விபரம் குறித்த 50க்கும் மேற்பட்ட விபரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக கல்வித்துறைக்காக தனியாரால் செயல்படுத்தப்படும் 'எமிஸ்' இணையதளத்தில் மாணவர், ஆசிரியர், அரசு நலத்திட்டங்கள் என டேட்டா மற்றும் போட்டோவுடன் தினம் நுாற்றுக்கணக்கான பதிவேற்றங்களால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் காவு வாங்கப்பட்டு வருகிறது. 'எமிஸ் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்' என துறை அமைச்சர் மகேஷ் பலமுறை உறுதியளித்தும் நடைமுறைக்கு வந்தபாடில்லை. இதனால் ஆசிரியர்கள் மனஉளைச்சலுடன் உள்ளனர்.


இந்நிலையில் மத்திய அரசு செயலி எனக்கூறி 'யுடைஸ் பிளஸ்'ல் ஒன்று முதல் பிளஸ் 2 வரையான மாணவர்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட விபரங்களை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஏற்கனவே எமிஸ் பணியால் பாதிக்கப்பட்ட கற்பித்தல் பணி, தற்போது அதன் பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.


இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: இது இரண்டாவது எமிஸ் பணி போல் உள்ளது. 'யுடைஸ் பிளஸ்' கேட்கப்படும் அனைத்து விபரங்களும் எமிஸில் உள்ளன. ஆனாலும் மீண்டும் அதை பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்களின் ஜெனரல் புரபைல், பெர்மனன்ட் என்ரோல் நம்பர் (பென்) உள்ளிட்ட தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


குறிப்பாக மாணவர் ஆதார் எண், பிறந்த தேதிக்கான சான்றிதழ் பதிவேற்றம் பெரும் சவாலாக உள்ளது. இப்பணியை தவிர பள்ளிகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட முடியவில்லை. இப்பிரச்னைக்கு கல்வித்துறை முடிவு கட்டவில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி