முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒரே ஷிப்டில் வரும் ஆக. 3-ம் தேதி நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளாமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. அதன்படி எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளாமோ படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்.13-ம் தேதி தொடங்கி கடந்த மே 7-ம் தேதி நிறைவடைந்தது.
தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடுமுழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் முடித்த மருத்துவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் என 17 இடங்கள் உட்பட நாடுமுழுவதும் 179 நகரங்களில் ஜூன் 15-ம் தேதி காலை, பிற்பகல் என இரு கட்டங்களாக நீட் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இரண்டு ஷிப்ட்களில் நீட் நடத்துவது தொடர்பான வழக்கை சில தினங்களுக்கு முன்பு விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்படும். ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் தள்ளிவைத்தது.
இந்நிலையில், நேற்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒரே ஷிப்டில் கூடுதல் நகரங்களில் வரும் ஆக.3-ம் தேதி காலை 9 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு நகரத்தை https://www.natboard.edu.in/ என்ற இணையதளத்தில் வரும் 13-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 17-ம் தேதி நள்ளிரவு 11.55 மணிக்குள் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும். முதலில் தேர்வு நகரங்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு நகரங்கள் ஒதுக்கீடு பற்றி ஜூலை 21-ம் தேதி தெரிவிக்கப்படும். செப்.3-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி