TNPSC - குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு - குரூப் 2 (ஏ) தேர்வு முறையில் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2025

TNPSC - குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு - குரூப் 2 (ஏ) தேர்வு முறையில் மாற்றம்

சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. குரூப் 2 (ஏ)-வுக்கான தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “சார்-பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை யுபிஐ வசதி மூலமாக செலுத்தலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது ஆகும்.


அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் காலிப் பணியிடங்கள் பெறப்படு்ம பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், தேர்வர்களின் நலன் கருதி குரூப்-2 (ஏ) முதன்மைத் தேர்வு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.


முதல்நிலைத் தேர்வை பொறுத்தவரையில் குரூப்-2, குரூப்-2 (ஏ) இரு தேர்வுகளுக்கும் பொதுவான தேர்வுதான். பொது அறிவு மற்றும் கணிதம் தொடர்பான 100 கேள்விகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். இதில் வெற்றிபெறுவோர் அடுத்த கட்ட தேர்வான முதன்மைத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.


முதன்மைத்தேர்வானது குரூப்-2 பணிகளுக்கும், குரூப்-2(ஏ) பணிகளுக்கும் தனித்தனியே நடத்தப்படும். குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில், பொது அறிவு பகுதியில் 300 மதிப்பெண்களுக்கு விரிவாக விடையளிக்க வேண்டும். குரூப்-2 (ஏ) பணிகளுக்கு பொது அறிவு பகுதியில் 150 கேள்விகள், கணிதம் பகுதியில் 50 கேள்விகள் என அப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 300.


இது கணினி வழியில் நடத்தப்படும். முன்பு பொது அறிவு பகுதியில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடர்பான 60 வினாக்கள் இடம்பெற்றிருந்தது. தற்போது புதிய தேர்வுமுறையில் மொழிப் பாடம் தொடர்பான அந்த பகுதி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவாக பதில் எழுதக்கூடிய கட்டாய தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்வு குரூப்-2, குரூப் 2-(ஏ) இரு முதன்மைத் தேர்விலும் பொது தேர்வாக இடம்பெறும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண் ரேங்க் பட்டியல் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.


தேர்வர்கள் ஏமாற்றம்: ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 (ஏ) தேர்வில் குறைந்தபட்சம் 2,000 காலியிடங்களாவது வரும் என டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வெறும் 645 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலியிடங்கள் இருப்பதால அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், குரூப்-2 , குரூப்-2(ஏ) தேர்வில் 645 காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

2 comments:

  1. இவ்வளவு பணியிடங்களை காலியாக வைத்து விட்டு தற்காலிக ஆசிரியர் நியமனம் மட்டுமே செய்கின்றனர் அதிமுக மற்றும் திமுக கட்சியினர். இந்த இரு கட்சிகளையும் பி.எட் மற்றும் டீச்சர் ட்ரெயினிங் முடித்தவர்கள் இந்த தேர்தலில் புறந்தள்ளி விட்டு வேறு யாராவது வரட்டுமே என்ற மனநிலையில் உள்ளனர். வீட்டுக்கு வீடு இவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்!

    ReplyDelete
  2. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என்று சொல்லி விட்டு தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற வில்லை. சிறை நிரப்பும் போராட்டம் சென்னையில்!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி