காஞ்சிபுரம் மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கேள்விக்குறி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2013

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கேள்விக்குறி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அங்கீகாரத்தை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ள 84 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் கிடைக்குமா அல்லது ரத்தாகுமா என்பது, வரும் ஜூன் மாதம், அரசு அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும் என, அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், எல்.கே.ஜி., முதல், பத்தாம் வகுப்பு வரை, 133 மெட்ரிக் பள்ளிகள், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, 145 மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 278 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவை, காஞ்சிபுரம், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் கண்காணிப்பில் உள்ளன.இப்பள்ளிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். காலகெடுவுக்குள் புதுப்பிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்து, அவற்றின் பெயர்களை பத்திரிகைகள் மூலம், அரசு வெளியிடுவது வழக்கம்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 278 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், 84 பள்ளிகளின் உரிமை காலாவதி ஆகிவிட்டது. சமீபத்தில், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் நடத்திய ஆய்வின்போது, 84 பள்ளிகள் விதிகளை மீறி செயல்படுவது தெரியவந்தது. 42 பள்ளிகளில், போதிய இடவசதி இல்லாமல் இருப்பதும், 42 பள்ளிகளில், தனித்தனி இடங்களில் பள்ளி செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதனால், இப்பள்ளிகளுக்கு உரிமம் புதுப்பிப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாகி உள்ளது. இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவரை கேட்ட போது, "உரிமம் காலாவதியாகி உள்ள இந்த 84 பள்ளிகள் தொடர்ந்து செயல்பட, ஆய்வின் போது, அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள விதிமீறல்களை சரிப்படுத்த வேண்டியது கட்டாயம். இந்த வகையில், கூடுதல் இடம் வாங்கி, கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்ய வேண்டும்" என்றார்.மேலும், "தனித்தனி இடங்களில் இயங்கும் பள்ளியை (வகுப்பறைகளை)ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டும். இந்த குறைகளை சரி செய்தால்மட்டுமே, அங்கீகாரம் கிடைக்கும் அல்லது, கல்வித்துறை உயர் அதிகாரிகள், இப்பள்ளிகளுக்கு விதிவிலக்கு அளித்தாலும் அங்கீகாரம் பெற முடியும்" என்றார்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின்ஆய்வாளர் கூறியதாவது: தமிழக அரசு அவ்வப்போது வெளியிடும் அரசாணை மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குனர் அறிவுரைகளின் கீழ், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, உரிமத்தை புதுப்பித்து வருகிறோம்.உரிமம் காலாவதியாகிவிட்ட 84 பள்ளிகளின் நிலை, தமிழக அரசின்அடுத்த அறிவிப்பு வரும்போது தான் தெரிய வரும். மற்ற பள்ளிகளின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு, விதிமீறல்கள் இல்லாமல் இருப்பின் அங்கீகாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.தமிழக அரசின் அடுத்த அறிவிப்பு ஜுன் மாதம் தான் வரும் என்று கூறப்படுகிறது. அதுவரை போதிய அவகாசம் உள்ளதால், வழக்கமான பாணியில் அரசியல் வாதிகளை அணுகாமல், அதிகாரி களின் பரிந்துரைப்படி, விதிமீறல்களை களைவதற்கு பள்ளிகள் முயற்சி எடுக்கலாம். இதன் மூலம் மணவர்களின் நலன் மேம்படும்.ஒரு மெட்ரிக் பள்ளியை துவக்க வேண்டும் என்றால், மாநகராட்சி எல்லையில், ஆறு கிரவுண்ட் நிலம், மாவட்ட தலைநகரம் என்றால், எட்டு கிரவுண்ட் நிலம்,நகராட்சி என்றால், 10 கிரவுண்ட் நிலம், பேரூராட்சி என்றால், ஒரு ஏக்கர் நிலம், ஊராட்சி என்றால், மூன்று ஏக்கர் நிலத்தில் பள்ளி வளாகம் அமைந்திருக்க வேண்டும்.மேலும், இந்த இடம், ஒரே இடத்தில் அமைந்திருக்க வேண்டும். இதில், வகுப்பறைகள், விளையாட்டு திடல், அலுவலகம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள், ஒரே வளாகத்தில் அமைக்க வேண்டும் என, அரசாணைஉள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி