குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க ஒரு லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2013

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க ஒரு லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.குழந்தைகள் பாலியல்
வன்கொடுமைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் பள்ளிகளிலும்,பள்ளிகளுக்கு வெளியிலும் அதிகரித்து வருகின்றன.இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குழந்தைகள் மீதான உரிமை மீறல் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விழிப்புணர்வுப் பயிற்சி,குழந்தைகளும் ஆசிரியர்களும் அதிக விழிப்போடு இருக்க உதவும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.முதற்கட்டமாக,தமிழகம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.இதில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 60 பேருக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.17)பயிற்சி தொடங்கியது. சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை,வேலூர்,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் பயிற்றுநர்கள்,உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.இவர்கள் கருத்தாளர்களாக இருந்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பிற ஆசிரியர்களுக்குப் பயிற்சியை வழங்குவார்கள். ஆசிரியர்களுக்கான பயிற்சி அக்டோபர் மாதம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.துளிர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியை வழங்குகின்றனர்.
என்ன பயிற்சி?
எது பாலியல் வன்கொடுமை,பாலியல் கொடுமைக்கான அறிகுறிகள்,சாதாரணமாக தொடுவதற்கும்,தவறான நோக்கத்தில் தொடுவதற்கும் உள்ள வேறுபாடு,பாதிக்கப்படும் குழந்தைகளின் அச்சத்தைப் போக்குதல்,தவறிழைத்தவர்களுக்கு தண்டனைப் பெற்றுத் தருதல் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தப் பயிற்சிவழங்கப்படுகிறது.குறிப்பாக பள்ளிகளிலோ,வெளியிலோ தனியான இடத்துக்கு யாரேனும் அழைத்தால் போகக் கூடாது உள்ளிட்ட பொதுவான ஆலோசனைகளும் ஆசிரியர்களின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை மண்டலத்துக்கான பயிற்சியில் பெண் குழந்தைகளுக்கு நிகராக ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என பயிற்சியாளர் கூறியது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆசிரியர்களுக்கே இது குறித்து பேசுவதில் தயக்கம் இருக்கிறது. இந்தத் தயக்கத்தைப் போக்கி அவர்களை குழு விவாதத்துக்கு தயார் செய்யவே ஒருநாள் தேவைப்படுகிறது.இந்தப் பயிற்சியின் முடிவில் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமை குறித்த விழிப்புணர்வு பெற்றுச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி