தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க, சிறப்பு பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு பிஎட் பட்டதாரிகள் சங்க மாநில தலைவர் வடிவேல் முருகன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனைத்து வகை மாற்றுத்திறன் குழந்தைகள் படிக்கின்றனர். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அதிக கவனிப்பு கொடுக்க வேண்டும். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கற்பிக்கும் சிறப்பு பிஎட் படித்தவர்கள் அதிகளவில் உள்ளனர்.அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பொது பிஎட் முடித்தவர்கள் பாடங் களை கற்பிக்கின்றனர்.
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வியில் சமவாய்ப்பு, சம உரிமை, சம அந்தஸ்து வழங்க வேண்டும் என 1995 சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி, பள்ளிகளில் பிற மாணவர்களுடன் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கற்பிக்க, சிறப்பு பிஎட் படித்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவர்களால் மட்டுமே மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி அளிக்க முடியும். மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வியில் தனிக்கவனம் செலுத்துவதன் மூலம், அவர்கள் சமுதாயத்தில் தனித்துவம் மிக்கவர்களாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு பிஎட் ஆசிரியர் பணியிடத்தை உருவாக்கி, அதில் எங்கள் சங்கத்தை சேர்ந்த சிறப்பு பிஎட் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு பிஎட் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, மனுதாரர் சங்கம் அனுப்பிய மனுவை 8 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி