நவீன தமிழகத்தை வடிவமைத்த சிற்பி காமராஜர்: மல்லிகார்ஜுன கார்கே - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2014

நவீன தமிழகத்தை வடிவமைத்த சிற்பி காமராஜர்: மல்லிகார்ஜுன கார்கே

நவீன தமிழகத்தை வடிவமைத்த சிற்பியாக திகழ்ந்தவர் காமராஜர் என மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகழாரம் சூட்டினார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காமராஜரின் அரசியல் குரு தீரர் சத்தியமூர்த்தியின் மார்பளவு வெண்கலச் சிலையை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து அவர் பேசியது:

காமராஜரின் அரசியல் குருவான தீரர் சத்தியமூர்த்தி சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசியத் தலைவராக விளங்கியவர். காமராஜரை மிகப்பெரிய தலைவராக உருவாக்கிய பெருமைக்குரியவர்.

எளிய குடும்பத்தில் பிறந்து பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு காங்கிரஸில் இணைந்த காமராஜருக்கு இந்தியும், ஆங்கிலமும் தெரியாது. ஆனாலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய இரண்டு பிரதமர்களை உருவாக்கினார்.

இன்று குஜராத் மாடல் என பாஜகவினர் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். திட்டக் கமிஷன் உள்பட பல்வேறு நிறுவனங்களின் புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தைவிட குஜராத் பின்தங்கியுள்ளது.

தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர். நவீன தமிழகத்தை வடிவமைத்த சிற்பி அவரே. தமிழகத்தில் 5 கிலோமீட்டருக்கு ஒரு பள்ளிக்கூடத்தை திறந்து, மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஆரம்பப் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தினார்.

பல லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் அணைகள் கட்டி, கால்வாய்களை வெட்டி விவசாயத்திலும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், திருச்சி பாரதமிகு மின் நிறுவனம், மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ரயில் பெட்டி தொழில் துறையிலும் புரட்சிக்கு வித்திட்டவர் காமராஜர். ஒரு காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் பலம் மிக்க கட்சியாக இருந்தது. மீண்டும் தமிழகத்தில் காங்கிரûஸ வலிமை மிக்க கட்சியாக மாற்ற அனைவரும் உழைக்க வேண்டும்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்ட மசோதாக்களை கடுமையாக எதிர்த்த பாஜக, ஆட்சிக்கு வந்தவுடன் அதே மசோதாக்களை சட்டமாக்கியுள்ளது.

காங்கிரஸ் அரசின் திட்டங்களை அப்படியே பெயர் மாற்றி செயல்படுத்தி வருகிறது. மக்கள் இப்போது உண்மையை உணரத் தொடங்கி விட்டார்கள். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி என்றார் மல்லிகார்ஜுன கார்கே.

20 ஆண்டு சாதனை... முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பேசியது: திராவிடக் கட்சிகள் 47 ஆண்டுகளில் செய்ய முடியாததை காங்கிரஸ் 20 ஆண்டுகளில் செய்துள்ளது. இன்றும் காமராஜர் ஆட்சியைத் தான் அனைவரும் உதாரணம் காட்டுகின்றனர். திராவிடக் கட்சிகளுக்கு காங்கிரஸ் சளைத்தது அல்ல. காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் உதட்டளவில் இல்லாமல் உண்மையான உணர்வுடன் ஒன்றுபட்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழகத்தில் இன்றைய அரசியல் சூழலை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் வாசன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி