ஓட்டுனர், நடத்துனர் பணிகளுக்கு எழுத்து தேர்வு இல்லை: தனி நீதிபதியின் உத்தரவுக்கு 'டிவிஷன் பெஞ்ச்' தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2014

ஓட்டுனர், நடத்துனர் பணிகளுக்கு எழுத்து தேர்வு இல்லை: தனி நீதிபதியின் உத்தரவுக்கு 'டிவிஷன் பெஞ்ச்' தடை


போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, எழுத்துதேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற 'டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த, கோவைசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த உயர்நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவு: போக்குவரத்து கழகங்களில் உள்ள பணிகளுக்கானகல்வித் தகுதி, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 என்று இருந்தால், படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு, 'வெயிட்டேஜ்' அளிக்க வேண்டும் அல்லது கல்வி தகுதிக்கு இணையாக எழுத்து தேர்வு நடத்த வேண்டும். பத்தாம் வகுப்புக்கு குறைவாக அல்லது பட்டப் படிப்பு தகுதி என, நிர்ணயிக்கப்பட்டால்,கல்வித் தகுதிக்கு இணையாக, எழுத்து தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டது. இந்த உத்தரவின்படி பார்த்தால், ஓட்டுனர், நடத்துனர்பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விளம்பரம் வெளியிட்டு, நேர்முகத் தேர்வு நடந்து வருகிறது.

இதற்கிடையில், நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே அல்லாமல், எழுத்து தேர்வின் அடிப்படையில், ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தேர்ந்தெடுக்க வேண்டும்என, மீண்டும் கடந்த வாரம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆகஸ்ட்டில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளர், தாக்கல் செய்த அப்பீல் மனு: ஓட்டுனர்களுக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி தான் தகுதி என, உள்ளது. அவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்த வேண்டும் என்பது தான், தனி நீதிபதியின் உத்தரவு. இதனால், வாகனத்தை ஓட்டி காட்டும் தேர்வு, ரத்தாகி விடுகிறது. அது,பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து. இந்த வழக்கில், போக்குவரத்து துறையை சேர்க்கவில்லை. கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட, தேர்வு நடவடிக்கைகளில் முடிவுஎடுக்கும் போது, போக்குவரத்து துறை, போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்களை சேர்க்காதது, எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஓட்டுனர்,நடத்துனரை தேர்ந்தெடுக்கும் போது, அவர்களின் உடற்கூறுகளை கவனிக்க வேண்டியதுஅவசியம்.

நேர்முக தேர்வின் போது மட்டுமே, அதை ஆராய முடியும். ஆனால், நேர்முக தேர்வை செல்லாததாக ஆக்கும் வகையில், தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின் நகல், கடந்த, 15ம் தேதி தான் எங்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த மாதம், 2ம் தேதி, விளம்பரம் வெளியிடப்பட்டு, 29ம் தேதி முதல், நேர்முகத் தேர்வுக்கான கடிதங்களை அனுப்ப துவங்கி விட்டோம். கடந்த, 10ம் தேதி, முதல் நேர்முகத் தேர்வு துவங்கி விட்டது. எனவே, மீண்டும் தேர்வர்கள் அனைவரையும் அழைப்பதற்கு, கால அவகாசம் ஆகும். பஸ்களை இயக்க, ஓட்டுனர், நடத்துனர்கள் அவசரமாக தேவைப்படுகின்றனர். ஏற்கனவே முடிந்து போன நடவடிக்கைகளை, மீண்டும் ஆரம்பிக்கதேவையில்லை. அடுத்த கட்டத்தின் போது, புதிய நடைமுறையை கையாளுவது தான் சரியாக இருக்கும்.

மேலும், மத்திய ஏஜன்சி அல்லது டி.என்.பி.எஸ்.சி., மூலம்,தேர்வு செய்வதும், கொள்கை சம்பந்தப்பட்டது. எனவே, கடந்த ஆகஸ்டில் பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். அப்பீல் மனு மீதான விசாரணை முடியும் வரை, அதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. போக்குவரத்து கழகம் சார்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜரானார். அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட, 'டிவிஷன் பெஞ்ச்' கடந்த ஆகஸ்டில் பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, சம்பந்தப்பட்டவர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி