பிளஸ் 2 தேர்வு தொடங்கியது: தமிழ் முதல்தாள் எளிமை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2015

பிளஸ் 2 தேர்வு தொடங்கியது: தமிழ் முதல்தாள் எளிமை

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களின் முதல் தாள் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், தமிழ் முதல் தாளில் காப்பியடித்ததாக 5 தனித்தேர்வர்கள் பிடிபட்டனர்.

சென்னை, கடலூர் மாவட்டங்களில் தலா 2 பேரும், மதுரையில் ஒருவரும் பிடிபட்டனர்.

பிளஸ் 2 தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும், தனித்தேர்வர்களாக 42 ஆயிரம் பேரும் தேர்வு எழுதினர். கிராமப் பகுதிகளில் இருந்த தேர்வு மையங்களுக்குக்கூட தேர்வு நடைபெற்ற மூன்று மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற தேர்வை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபீதா, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

விடைத்தாள் மையங்கள்: வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களிலிருந்து வாகனங்களில் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டன. அதேபோல், தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் அந்தந்த கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக விடைத்தாள் மையங்களுக்குக் கொண்டுவரப்பட்டன.

இந்த மையங்களில் விடைத்தாள்கள் சில நாள்கள் வைக்கப்பட்டு, அதன்பிறகு, விடைத்தாள் மதிப்பீட்டுக்காக வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நன்கு திட்டமிடப்பட்டிருந்ததால், எந்தவிதப் புகார்களுக்கும் இடமின்றி முதல்நாள் தேர்வுகள் நடைபெற்றதாக மாவட்டங்களில் தேர்வுகளை மேற்பார்வையிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில்... சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 144 தேர்வு மையங்களில் 52 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 109 தேர்வு மையங்களில் 47 ஆயிரம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 102 தேர்வு மையங்களில் 47 ஆயிரம் பேரும் தேர்வு எழுதினர். திருவள்ளூரில் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், காஞ்சிபுரத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் தேர்வுப் பணிகளைக் கண்காணித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி