புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை: மத்திய கல்வியியல் கவுன்சில் கடும் எச்சரிக்கை' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2015

புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை: மத்திய கல்வியியல் கவுன்சில் கடும் எச்சரிக்கை'


'தமிழகத்தில், புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை' என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது.தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், மூன்று நாள் சர்வதேச மாநாடு, சென்னையில் நேற்று துவங்கியது.
பல்கலை, தொழிற்துறை மற்றும் சமூகம் இடையிலான இடைவெளியைக் குறைத்து, கல்வியை மேம்படுத்துவது எப்படி என்ற மையக் கருத்துடன் இந்த மாநாடு நடக்கிறது.கல்வியியல் கவுன்சில்:ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணை வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,யின் துணைத் தலைவர் தேவராஜ், உயர்கல்வித் துறை முதன்மை செயலர் அபூர்வா, ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் கலைச்செல்வன், தென் ஆப்ரிக்காவின் வடமேற்கு பல்கலை பேராசிரியர் வோல் ஹ்யூட்டர், சின்சினாட்டி பல்கலை இணை முதல்வர் பியூஷ் சாமி, ஆசிரியர் பல்கலை தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர் மணிவண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சந்தோஷ் பாண்டா பேசியதாவது:ஆசிரியர் கல்வியியல் பி.எட்., படிப்புக்கான, 2014ம் ஆண்டு புதிய விதிமுறைகள், நாடு முழுவதும், வரும் கல்வியாண்டில், ஜூலை முதல் அமலாகிறது. கல்வியில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளதால், இந்த விதிமுறைகளை அமல்படுத்த முன்வர வேண்டும். தமிழகத்தில் அதிக அளவில் பி.எட்., கல்லூரிகளில் முதலீடு செய்கின்றனர். அதிக முதலீடு இருந்தால்,வேறு துறைகளில் அதை பயன்படுத்துங்கள்; கல்வியை வணிகமாகக் கருத வேண்டாம். இவ்வாறு, அவர் பேசினார்.

தரமற்ற கல்லூரிகள் அதிகம்:

பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டிலேயே, தமிழகத்தில் தான் அதிக பி.எட்., கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் இனி புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு மத்திய கல்வியல் கவுன்சில் அனுமதி அளிக்காது. தரமற்ற கல்லூரிகள் அதிகமாவதைத்தடுக்கவும், தரமான கல்லூரிகளை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.புதிய கல்லூரி தேவை என்று, மாநில ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், தடையில்லா சான்று அளித்தால் மட்டுமே, அனுமதி குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர்கூறினார்.யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ''நாடு முழுவதும், 155 கல்லூரிகள், தன்னாட்சி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளன. தமிழகத்தில், 20 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்காக தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி