36 பாட திட்டங்களை இணைத்து, 'நீட்' தேர்வு, 'சிலபஸ்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2018

36 பாட திட்டங்களை இணைத்து, 'நீட்' தேர்வு, 'சிலபஸ்'


நீட்' தேர்வுக்கு, சி.பி.எஸ்.இ., மட்டுமின்றி, 36 பாடத்திட்டங்களை இணைத்து, 'சிலபஸ்' தயார் செய்யப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நீட் என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு, மூன்று ஆண்டுகளுக்கு முன், நாடு முழுவதும், அமலுக்கு வந்தது.

பிளஸ், 2 முடிக்கும் மாணவர்களில், அறிவியல் பிரிவினர், மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அனைத்து மாநிலங்களிலும், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளின் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்ச்சி கட்டாயம். இதுவரை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வாயிலாக, நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில், பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. நீட் தேர்வுக்கான வினாத்தாள் மிக கடினமாக இருப்பதாகவும், தமிழில்மொழி மாற்றம் தவறு என்றும் புகார்கள் எழுந்தன.இந்நிலையில், அனைத்து வகை நுழைவு தேர்வுகளையும் நடத்த, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., நிறுவனம் உருவாக்கப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த அமைப்பு, இந்தஆண்டு முதல், நீட் தேர்வை நடத்துகிறது.

அடுத்த ஆண்டு, மே, 5ல் நடக்க உள்ள தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நவ., 1ல் துவங்கியது; வரும், 30 வரை விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், நீட் தேர்வுக்கான பாடத்திட்டம், https://ntaneet.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, என்.டி.ஏ., கூறியிருப்பதாவது:அனைத்து மாநிலங்களிலும் உள்ள, 36 பாட திட்டங்களை இணைத்து, நீட் பாட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படி, அனைத்து பாடதிட்டங்களிலும், பொதுவாக உள்ள அம்சங்களை எடுத்து, அதன்படி, நீட் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கப்படும்.சி.பி.எஸ்.இ.,க்கான தேசிய ஆசிரியர் மற்றும் கல்வியியல் நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., பாட திட்டம் மட்டுமின்றி, தமிழக சமச்சீர் கல்வி திட்டம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா பாட திட்டம், ஐ.சி.எஸ்.இ., பாட திட்டம் என, அனைத்து வகை பாட திட்டங்களிலும் பொதுவாக உள்ள அம்சங்கள் மட்டுமே, வினாத்தாளில் இடம் பெறும்.இவ்வாறு, என்.டி.ஏ., கூறியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி