பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை பெற நடவடிக்கை- - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2012

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை பெற நடவடிக்கை-

பொதுத்தேர்வு எழுதி முடித்துள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், தேர்வு முடிவுகளுக்குப்பின், அந்தந்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவை மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கல்வி அதிகாரி பணி: பள்ளிக் கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகத் துறை, ஐ.டி., துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.இதற்காக, மாணவர்களின் முழுமையான விவரங்களை திரட்ட, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்காக, போதிய விவரங்கள் ஏற்கனவே திரட்டப்பட்டு இருப்பதால், வேலை வாய்ப்பு பதிவிற்கான கூடுதல் தகவல்களை மட்டும் பெறும் பணிகளில், மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.ஆய்வு கூட்டம்: இப்பணிகள் நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில்நடந்தது. பள்ளிக் கல்வித்துறைசெயலர் சபீதா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செயலர் மோகன் பியாரே, ஐ.டி., துறை செயலர் பிரபாகர் மற்றும்மூன்று துறைகள் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் செய்து வரும் பணிகள் குறித்து,"வீடியோ கான்பிரன்சிங்" மூலம், மூன்று துறை செயலர்களும் கேட்டறிந்தனர்.சமூக மேம்பாடு: இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாணவர்களின் பெயர், தந்தை பெயர், முகவரி, பெற்றோரின் தொழில், வருவாய் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திரட்டப்படுகின்றன. வேலை வாய்ப்புக்காக மட்டும் இவை பயன்படுவது மட்டுமல்லாமல், மாநிலத்தின் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டு நிலையை அறிந்து கொள்ளவும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.வாய்ப்பை அதிகரிக்குமா?: தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிலகங்களில், பட்டதாரிகள் தவிர, தொழில்துறையில் திறன் உள்ள அல்லது பட்டயப் படிப்பு படித்த மாணவ, மாணவியர் தேடல் அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட சில தொழிலகங்கள், அடிப்படை கல்வித் தகுதி உடையவர்களுக்கும் பணி பயிற்சி தந்து, வேலைக்கு எடுக்கின்றனர். அத்தகைய சமயங்களில், தொழிலகங்கள் அமைந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள் குறித்த விவரம் அறிய, இத்தகவல் தொகுப்பு உதவிடும். அது, தமிழகத்தில் இருந்து, மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.அதேபோல, மாதச் சம்பளம் மற்றும் சில சலுகைகளுக்காக, சில்லரை வணிகம் அல்லது"மால்கள்" என்ற வணிகத் தொகுப்பு கடைகளில் பணிபுரிய, அதிகம் பேர் ஆசைப்படுகின்றனர். இவர்களுடைய எதிர்கால பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்வகையில், இத்தகவல் தொகுப்பு அமையலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி