தமிழகத்தில் நாளை (பிப்.,26) ஒரே நாளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 60ஆயிரம் பேர் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை, 4 ஆயிரம் ஆசிரியர் பயிற்றுனர்களை வைத்து,
சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (பிப்.,25) மாநிலம் முழுவதும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆசிரியர்கள் வகுப்புகளுக்குச் சென்றாலும், அரசு சார்பில் கேட்கப்படும் விவரங்களை தெரிவிக்காமல், ஒத்துழைப்பு மறுக்கப்படும். 2 ம் நாளான நாளை (பிப்., 26) 60 ஆயிரம் ஆசிரியர்கள் ஒரே நாளில் தற்செயல் விடுப்பு எடுக்கின்றனர்.போராட்டத்தை 'பிசுபிசுக்க' வைக்கவும், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுனர்களை தொடக்கப் பள்ளி வகுப்புகளுக்கு பாடம் நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆசிரியர் பயிற்றுனர் (பி.ஆர்.டி.) எண்ணிக்கை விவரம், தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி, மாநில அளவில் 4,421 ஆசிரியர் பயிற்றுனர்கள் தான் உள்ளனர். இவர்கள் மூலம் 60 ஆயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை உட்பட பல மாவட்டங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு பி.ஆர்.டி.,கள் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. பிப்.,26 லும் பயிற்சி நடக்கவுள்ளது. இப்பயற்சி அளிப்பவர்களுக்கு, மாற்றுப்பணி குறித்த உத்தரவு நேற்று வரை கிடைக்கவில்லை.தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.மதுரை கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தின் பாதிப்பை தடுக்க, ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு தான் பெரும்பாலும் மாற்றுப் பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 3 ஆயிரம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கிறார்கள். மாற்றுப்பணிக்காக 236 ஆசிரியர் பயிற்றுனர்களே உள்ளனர். மாநில அளவிலும் இதே நிலை தான், என்றார்.
Nalla Seithi- Nallathe Nattakkum. SG Tr's in Urimaiyai Innum Ethanai naalaikkuthaan Thalli Potuvathu. Arasu Iniyaahilum Yosikka Vendaama?
ReplyDelete