அ.தே.இ - தேர்வர்கள் எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கி தாமதமாக வருகைபுரிபவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2014

அ.தே.இ - தேர்வர்கள் எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கி தாமதமாக வருகைபுரிபவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு.


நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்ச் 2014 மேல்நிலைத் தேர்வு மற்றும் 26.03.2014 அன்று துவங்கவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாகவும்,
விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் நிறைவான பணி மேற்கொள்ளும் வகையில் 08.03.2014 அன்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தில் நடைபெற்ற முகாம் அலுவலர் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை, அரசு முதன்மைச் செயலாளரால் கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவ்வறிவுரைகளை அனைத்து முகாம் அலுவலர்களும் பின்பற்றுமாறும், முகாம் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலை பணியாளர்களுக்கும் இவ்வறிவுரைகள் குறித்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1. தேர்வு மையத்திற்கு வரும்பொழுது, எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி தாமதமாக வருகைபுரியும் தேர்வர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உண்மையை ஆராய்ந்து தேர்வர்களை தேர்வெழுத அனுமதிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

2. விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களாக செயல்படும் பள்ளியில் மதிப்பீட்டுப் பணிக்கு போதுமான அறைகள், தளவாடங்கள், ஆண்/பெண் இருபாலருக்கும் தனித்தனியே சுத்தமாக கழிவறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், தடையற்ற மின்வசதி, மின்விளக்கு,மின்விசிறி போன்ற அனைத்து வசதிகளும் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இவற்றில் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3. விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் நடைபெறும் பள்ளியைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் எவரும் மதிப்பீட்டுப் பணி நடைபெறும் நேரத்தில் பள்ளி வளாகத்தில் இருக்கக்கூடாது என்பதனை அறிவுறுத்தி அதனைக் கண்காணிக்க வேண்டும்.

4. விடைத்தாள் கட்டுகள் பராமரிக்கப்படும் மதிப்பீட்டு மையங்களின் ஜன்னல்கள் உட்புறமாக பூட்டப்பட்டு பலகைகள் கொண்டு மறைக்கப்பட்டிருக்க வேண்டும்.

5. மதிப்பீட்டு மையங்களில் உள்ள விடைத்தாள் கட்டுகள் ஈரக்கசிவு மற்றும் வெப்பத்தினால் பாதிக்கப்படாதவாறு பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

6. தீத்தடுப்பு சாதனங்கள், மணல் நிரம்பிய வாளிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

7. எதிர்பாராதவிதமாக மழை பெய்யும் நிகழ்வுகளில் விடைத்தாட்கள் சேதமடையாமல் இருக்கத்தக்க வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

8. மதிப்பீட்டு அறைகளில் எலிகள், கரையான் மற்றும் பூச்சிகள் நுழைந்து விடைத்தாட்களை சேதமடையச் செய்யும் என்பதால் அதனைத் தவிர்க்கும் வகையில் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

9. மதிப்பீட்டு முகாம் வளாகத்தில் """"புகை பிடிக்காதீர்"" என்பதைச் சுவரொட்டிகளாக தெளிவாக அனைவரும் அறியும் வகையில் தேவையான இடங்களில் ஒட்டி வைக்கவேண்டும்.

10. மதிப்பீட்டு முகாம்களில் பணியாற்றுவோருக்குத் தேவையான உணவு வகைகள் கிடைக்கும் வகையில் மதிப்பீட்டு முகாம்களின் நுழைவு வாயில் அருகில்""""சிற்றுண்டி உணவகம்"" ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு மதிப்பீட்டு முகாம்நடைபெறும் பள்ளியின் மேலாண்மையிடமிருந்து எவ்விதமான சலுகைகளும் பெறக்கூடாது.

11. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் பணியாளர்களில் சர்க்கரை நோய்மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாகிய வயது முதிர்ந்தவர்களும் இருப்பர். அவர்களின் உடல் நலன் கருதி, அவர்களை உணவு இடைவேளைக்கு சரியான நேரத்தில் அனுப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

12. விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் அலைபேசியை உபயோகிக்க கூடாது என்றும், அதற்கென குறிப்பிட்டுள்ள இடத்தில் வைக்க அறிவுறுத்த வேண்டும்.

13. கடந்த காலங்களில் விடைத்தாள் கட்டுகள் காணாமல் போன நிகழ்வு மற்றும் இரயிலிலிருந்து கீழே விழுந்த சம்பவத்தினைத் தொடர்ந்து தேர்வுத் துறை விடைத்தாள்கட்டுகளை விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் ஒப்படைப்பதற்கு நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் புதிய அணுகுமுறையைக் கையாள்கிறது. எனவே விடைத்தாள் கட்டுகளைப் பெற்றுக் கொள்வது மற்றும் ஒப்படைப்பதில் ஏதேனும் இடர்ப்பாடுகள் ஏற்படின் அதனை தேர்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்களின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வருதல் வேண்டும்.

தமிழக அரசு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், விடைத்தாட்களில் தேர்வர்களின் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் அடங்கிய முகப்புப் படிவம் அறிமுகப்படுத்தியதன் காரணமாக, இவ்வாண்டு மேல்நிலைத் தேர்வில் மொழிப்பாடம் முதல் மற்றும் இரண்டாம் தாள் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளின் போது முறைகேடுகள் மிகவும் குறைந்துள்ளதை தெரிவித்து, தேர்வுப் பணியில் ஈடுபட்ட அனைத்து நிலை அலுவலர்களையும் பாராட்டிய அரசு முதன்மைச் செயலாளர், தொடரும் பாடத்தேர்வுகளில் எவ்வித புகாருக்கும் இடமின்றி தேர்வுகளை திறம்பட நடத்திட கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒம்/-
இயக்குநர்

DGE - PRINCIPLE SECY INSTRUCTIONS TO CAMP OFFICERS REG EXAMINATIONS & VALUATIONS CLICK HERE...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி