சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும்கூட மாணவர்கள் இன்னமும் பெரிய மூட்டையை முதுகில் சுமந்து செல்கிறார்கள்.
இதற்குக் காரணம், புத்தகங்கள் சில தொகுப்பாக மாற்றப்பட்டாலும், நோட்டுப் புத்தகங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தது 15ஆக இருக்கிறது.
ஆகவே மாணவர்களின் முதுகுச்சுமை இன்னும் குறையவில்லை.கணினி யுகத்தில் இருக்கும் நாம், எல்லா அலுவலகங்களையும் காகிதமில்லா அலுவலகங்களாக மாற்றும்போது, நாடாளுமன்ற நடவடிக்கைகளையும்கூடபிரதமர் நரேந்திர மோடி காகிதமில்லாததாக மாற்றப்போகிறார் எனும்போது, மாணவர்களின் முதுகில் ஏன் காகிதச் சுமையை ஏற்ற வேண்டும்?பள்ளித் தொடக்க நாளில் இந்த மாணவர்கள் கொண்டுசெல்லும் 15 நோட்டுப் புத்தகங்களும் வெறுமனே எழுதப்படாத காகிதச் சுமை. இனிமேல்தான் அவர்கள் எழுதப்போகிறார்கள்.ஆனால் இவற்றின் எடை குறைந்தது 5 கிலோ! பள்ளிகளில் கற்பித்தல் நடைமுறைகளில் சில ஒழுங்குகளை ஏற்படுத்தினாலும்கூட போதும், இந்த நோட்டுப்புத்தகச் சுமையை இல்லாமல் ஆக்கிவிடலாம்.மாணவர்கள் தினமும் 20 வெள்ளைத்தாள்களை (ஏ4 அளவு) கொண்டு வந்தால் போதும்.
ஒவ்வொரு பாடத்தின் குறிப்புகள் மற்றும், எழுத்து வேலைகள் அனைத்தையும் இதிலேயே முடித்து, உரிய ஆசிரியரின் ஒப்புகையுடன் வீட்டுக்குஎடுத்துச் சென்று அதற்குரிய கோப்புகளில் முடிந்து வைக்கும் நடைமுறை மிகவும் எளிதானது. இந்த நடைமுறையை 6ஆம் வகுப்பிலிருந்து அறிமுகம் செய்யலாம்.இன்றைய இளம் தலைமுறை மிக வேகமாகவும், கணினியுகத்திற்கு தங்களை குழந்தைப்பருவத்திலேயே தகவமைத்துக் கொள்வதாகவும் இருப்பதால் இத்தகைய எளிய நடைமுறை, மாணவர்களுக்கு குழப்பதையோ அல்லது மெத்தனத்தையோ ஏற்படுத்தாது. மாறாக, பொறுப்புகளை ஏற்கச் செய்யும்.ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய செல்போனின் அத்தனை நுட்பங்களையும்அலசிப் பார்க்கும் இன்றைய மாணவர்கள், வகுப்பறைப் பாடங்களை நோட்டுகளில் எழுதுவதற்குப் பதிலாக , தனித்தனி தாள்களில் எழுத மாட்டார்கள் என்று கருதுவது சரியல்ல.நமது பள்ளித் தேர்வு முறை காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வு எனமூன்று கட்டங்களில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தையும் (தமிழ், ஆங்கிலம், சமூகவியல், கணிதம், உயிரியல் என) தேர்வுக்கு ஏற்ப மூன்று புத்தகத் தொகுப்பாக மாற்றிவிடுவதுமிக எளிது.மாணவர்கள் நோட்டுப் புத்தகம் கொண்டு செல்வதற்குப் பதிலாக 20 வெள்ளைத்தாள்களை ஒரு கோப்பில் வைத்துச் செல்வதும் எளிது. ஆக, மாணவர்களின் முதுகுச் சுமையை அரை கிலோவாகக் குறைத்துவிடலாம்.மாணவர்களுக்கான கிராஃப் உள்ளிட்ட செய்முறைப் பாடங்களுக்கான நோட்டுப் புத்தகங்களை அந்த வகுப்பறையிலேயே ஒரு பூட்டுள்ள பெட்டியில் பாதுகாப்பாக வைப்பதும், இந்த நோட்டுகளில் எழுதும் பணியை பள்ளி வேளையின் ஒரு பகுதியாகமாற்றிவிடுவதும், இவர்கள் இந்த நோட்டுகளை வீட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவையே இல்லாமல் ஆக்கிவிடும்.கல்வித்துறை இத்தோடு நின்றுவிடுதல் கூடாது. தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை தனக்கான ஒரு சாட்டிலைட் சானலைத் தொடங்க வேண்டியது மிகமிக அவசியம்.ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களில் மிகவும் அவசியமான பகுதிகளை, திறமையான ஆசிரியர்கள் கற்பிக்கும் தொடர்கள் இந்த சானல்களில் ஒளிபரப்பப்பட வேண்டும்.அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை தற்போது தமிழ்நாட்டில் ஆன்மிகம்தான் அதிகமாக ஊடகங்களில் இடம்பெறுகிறது. பள்ளிக் கல்வித்துறை இத்தகைய சானலை காலை நேரத்தில் ஒளிபரப்பலாம்.
இரவு 10 மணிக்கு மேல் மறுஒளிபரப்பு செய்யலாம்.இதனால் பெருநகரத்திலிருந்து கிராமப் பள்ளியில் படிக்கும் மாணவர் வரை ஒரேமாதிரியான ஒரே தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்பை பள்ளிக் கல்வித்துறை உருவாக்க முடியும். இதற்குப் பெருஞ்செலவு ஏற்படாது.தனியார் பள்ளிகளைப் போல ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கணினி அளித்து கல்வி வழங்குதல் சாத்தியமில்லை என்றாலும், இருக்கும் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி செம்மையான, செழுமையான கல்விப் பணியைச் செய்ய முடியும். மாணவர்களின் முதுகுச்சுமையைக் குறைக்க முடியும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி