பிரமாண்டம்:பி.எஸ்.எல்.வி., ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது;ஐந்து வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பயணம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2014

பிரமாண்டம்:பி.எஸ்.எல்.வி., ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது;ஐந்து வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பயணம்

பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஐந்து வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், இஸ்ரோ வர்த்தக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள, முதலாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதற்கான, 49 மணி நேர, கவுன்ட் - டவுன் நேற்று முன்தினம் காலை, 8:52 மணிக்கு துவங்கியது. பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதன் மொத்த எடை, 230 டன். பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம், பிரதான செயற்கைக்கோளாக, பிரான்ஸ் நாட்டின், ஸ்பாட் - 7 செயற்கைக்கோளும், ஜெர்மனி, கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் சிறிய ரக செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன.

பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட, 18 நிமிடங்களில், பிரான்ஸ் நாட்டின், ஸ்பாட் - 7 செயற்கைக்கோள், பூமியில் இருந்து, 659.8 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.ஜெர்மன் நாட்டின், ஐசாட் செயற்கைக்கோள், விண்ணில் ஏவப்பட்ட, 18:55 நிமிடங்களில், பூமியில் இருந்து, 660.6 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.கனடா நாட்டின், என்.எல்.எஸ்., 7.1செயற்கைக்கோள், 19.05 நிமிடங்களில், பூமியில் இருந்து, 661.2 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும்.
மற்றொரு செயற்கைக்கோள், என்.எல்.எஸ்., 7.1, 19.55 நிமிடங்களில், பூமியில் இருந்து, 661.8 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும்.சிங்கப்பூர் நாட்டின், வெலாக்ஸ்- 1 செயற்கைக் கோள், 19.96 நிமிடங்களில், பூமியில் இருந்து, 662.3 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும்.

கடந்த 2013ல், பி.எஸ்.எல்.வி., சி- 20ராக்கெட் மூலம், கனடா, 2; ஆஸ்திரியா, 2; டென்மார்க், 1 மற்றும் பிரிட்டன், 1 ஆகிய, ஆறு வெளிநாட்டு, செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.கடந்த 2008ல், அதிகபட்சமாக, பி.எஸ்.எல்.வி., சி - 9 ராக்கெட் மூலம், கனடா, ஜப்பான், நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, ஆகிய நாடுகளின், எட்டு ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.

மூன்று நிமிடம் தாமதம்:பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், 3 நிமிடம் தாமதமாக தன் பயணத்தை துவங்க உள்ளது.இது குறித்து, இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், விண் வெளியில் சுற்றும் செயற்கைக்கோள் கழிவுகளுடன், ராக்கெட் மோதுவதை தவிர்ப்பதற்காக, ஏற்கனவே திட்டமிட்டதை விட, 3 நிமிடங்கள் தாமதமாக ராக்கெட் ஏவப்படும். அதை கருத்தில் கொண்டு, இன்று காலை, 9:49 மணிக்கு ஏவுவதற்கு, பதிலாக 9:52 மணிக்கு (3 நிமிடம் தாமதமாக) ஏவப்படுகிறது, என்றார்.

பி.எஸ்.எல்.வி.,- ஜி.எஸ்.எல்.வி., வித்தியாசம் என்ன?: பி.எஸ்.எல்.வி., என்பது, போலார் சேட்டலைட் லாஞ்சிங் வெகிகிள் எனவும், ஜி.எஸ்.எல்.வி., என்பது, ஜியோசிங்க்ரோனஸ் சேட்டலைட் லாஞ்ச்வெகிகிள் எனவும் அழைக்கப்படுகிறது.இரண்டுக்கும் இடையே பல வித்தியாசங்களும், மாறுபாடுகளும் உள்ளன; அதே நேரத்தில் சில ஒற்றுமைகளும் உள்ளன.இரண்டுமே ராக்கெட்டுகள் தான். பி.எஸ்.எல்.வி., பழைய முறை; ஜி.எஸ்.எல்.வி., புதிய முறை.

பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 1 டன் (1,000 கிலோ) எடைக்கு குறைவான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லக் கூடியது. பி.எஸ்.எல்.வி., அதிகபட்சம், 2 - 2.5 டன் எடையை சுமந்து செல்லக் கூடியது.ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் அதிநவீன, கிரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் பயன் படுத்தப்படுகிறது. இதனால், அதிக அழுத்தத்துடன் கூடுதல் எடையை சுமந்து செல்ல முடியும்.
பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுக்கு, நான்கு நிலைகள் உள்ளன; ஜி.எஸ்.எல்.வி.,க்கு மூன்று நிலைகள் உள்ளன.பி.எஸ்.எல்.வி.,யில், ஆறு சாலிட் பூஸ்டர்கள்; ஜி.எஸ்.எல்.வி.,யில், நான்கு லிக்யுட் பூஸ்டர்கள் உள்ளன.பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவுதல் வெற்றிகரமானது. ஏவப்பட்ட, 18 முறைகளில், 16 முறைவெற்றி பெற்றுள்ளது; இரு முறை தோல்வி அடைந்துள்ளது.
ஜி.எஸ்.எல்.வி.,ராக்கெட் ஏவுதல்,7முறைநடைபெற்றதில், நான்கு முறை தோல்வி அடைந்துள்ளது; இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை, பாதி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி பார்வையிடுகிறார்:ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் சென்னைக்கு நேற்று வந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, விமான நிலையத்தில் சந்தித்து பேசினார்.பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், பிரதமர், நரேந்திர மோடி பதவியேற்ற பின் விண்ணில் செலுத்தப்படும், வர்த்தக ரீதியிலான முதல் ராக்கெட் ஆகும். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று ராக்கெட் ஏவுவதை பார்வையிட, பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் நேற்று மாலை, சென்னை வந்தார்.
அவர் வந்த ராணுவ விமானம், நேற்று மாலை, 3:50 மணிக்கு, சென்னை வான்வெளியை நெருங்கிய போது, விமான நிலைய பகுதியில், சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பாதுகாப்பு கருதி, சென்னை விமான கட்டுப்பாட்டு அறை (ஏ.டி.சி.,) உத்தரவுபடி, அந்த விமானம், 40 நிமிடங்கள் வானிலேயே வட்டமிட்டது.பின் நிலைமை சீரானவுடன், 4:30 மணிக்கு, மோடி வந்த விமானம், பழைய விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.அங்கு மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வருடன் பேச்சு: பின், பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை, விமான நிலைய ஓய்வு அறையில், 10 நிமிடங்கள் தனியாக சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பிற்கு இடையே, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், நிலவி வரும் வானிலை குறித்து, வானிலை ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொண்டு விவாதித்தனர். இதில் வானிலை சீரடைந்ததாக கூறியதை அடுத்து, பிரதமரை ஹெலிகாப்டரிலேயே ஸ்ரீஹரிகோட்டா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.பின் வானிலை சீரடைந்த பின் மாலை,5 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம், நரேந்திர மோடி,வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு சென்றனர்.
ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, இன்று காலை, 1 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, சென்னை திரும்பும் பிரதமர் மோடி, 11:15 மணிக்கு, ராணுவ தனி விமானம் மூலம், டில்லிபுறப்பட்டுச் செல்கிறார்.

எந்தெந்த நாடுகளின் ராக்கெட்டுகள்பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட்டுடன், ஐந்து வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.பிரான்ஸ் நாட்டின், ஸ்பாட் - 7 செயற்கைக்கோள், 714 கிலோ எடை உடையது. இந்த செயற்கைக்கோள், பூமியை ஆய்வு செய்ய பயன்படும். இதற்காக இந்த செயற்கைக் கோளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.
ஜெர்மனி நாட்டின், ஐசாட் 14 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள், கடல் வழிப் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கு உதவும்.கனடா நாட்டின், என்.எல்.எஸ்., 7.1 மற்றும் என்.எல்.எஸ்., 7.2 ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களும், தலா, 15 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள், ஜி.பி.எஸ்., அமைப்புக்கு உதவும்.சிங்கப்பூர் நாட்டின், வெலாக்ஸ் - 1 செயற்கைக்கோள், 7 கிலோ எடை கொண்டது. இது, சென்சார் கருவியுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது.

பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் மூலம் ஏற்கனவே வெளிநாடுகளைச் சேர்ந்த, 35 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இஸ்ரோ, பல முறை பி.எஸ்.எல்.வி.,ராக்கெட்டுகளை, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி