குறைந்தது பெட்ரோல், டீசல் விலை; பெட்ரோல்-ரூ.2.41, டீசல் ரூ.2.25 குறைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2014

குறைந்தது பெட்ரோல், டீசல் விலை; பெட்ரோல்-ரூ.2.41, டீசல் ரூ.2.25 குறைப்பு

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்கள் இன்னும், 25 நாட்களில் நடைபெற உள்ளதாலும், பெட்ரோல், டீசல் விலை, இன்று குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.41 குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய பெட்ரோல், டீசல் விலை, சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப அமைகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, உள்ளூர் சந்தைகளில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கும். கடந்த ஜூன் மாதம், ஒரு பேரல் கச்சா எண்ணெய், 115 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், படிப்படியாக அதன் விலை குறைந்து, கடந்த வார துவக்கத்தில், 82 டாலராக இருந்தது. இதையடுத்து, பெட்ரோலிய பொருட்களின் விலைகள், உள்நாட்டில் குறைக்கப்பட்டன. அதற்கு முன்னதாக, நான்கு முறை டீசல் விலை குறைப்பை, பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்தன. அக்டோபர் 18ல், டீசல் விலை, லிட்டருக்கு, 3.37 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்நடந்து முடிந்த, அரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சி மலர்ந்தும், மலர உள்ள நிலையில், இந்த இரு மாநிலங்களையும் கைப்பற்ற பா.ஜ., முடிவு செய்து உள்ளது. அந்த மாநிலங்களின் வாக்காளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், மேலும் விலை குறைப்பட்டது . அதன் படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.41 குறைக்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை, கடந்த ஆகஸ்ட் முதல், தொடர்ந்து ஆறாவது முறையாக குறைக்கப்பட்டது; டீசல் விலை தொடர்ந்து இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

விலை நிலவரம்: பெட்ரோல் விலை ரூ.2.41 குறைக்கப்பட்டதை தொடர்ந்து, டில்லியில் லிட்டருக்கு ரூ.66.65 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல், ரூ.2.41 குறைந்து 64.24 க்கு விற்கப்படும். கோல்கட்டாவில் லிட்டருக்கு ரூ.74.21 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல், ரூ.2.53 குறைந்து 71.68க்கு விற்கப்படும். மும்பையில் லிட்டருக்கு ரூ.74.46 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல், ரூ.2.49 குறைந்து 71.91க்கு விற்கப்படும். சென்னையில் லிட்டருக்கு ரூ.69.59 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல், ரூ.2.58 குறைந்து 67.01க்கு விற்கப்படும்.

டீசல் விலை ரூ.2.25 குறைக்கப்பட்டதை தொடர்ந்து, டில்லியில் லிட்டருக்கு ரூ.55.60 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த டீசல், ரூ.2.25 குறைந்து 53.35க்கு விற்கப்படும். கோல்கட்டாவில் லிட்டருக்கு ரூ.60.30 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த டீசல், ரூ.2.35 குறைந்து 57.95க்கு விற்கப்படும். மும்பையில் லிட்டருக்கு ரூ.63.54 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த டீசல், ரூ.2.50 குறைந்து 60.04க்கு விற்கப்படும். சென்னையில் லிட்டருக்கு ரூ.59.27 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த டீசல், ரூ.2.58 குறைந்து 56.84க்கு விற்கப்படும்.

ஓராண்டிற்கு முந்தைய நிலை வந்தது : பெட்ரோல் விலையை, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோலிய நிறுவனங்களே மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த பிறகு, பெட்ரோல் விலை அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் முதல், தொடர்ந்து ஐந்தாவது முறையாக, பெட்ரோல் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், 16 மாதங்களுக்கு முந்தைய, விலை குறைவான நிலையை பெட்ரோல் அடைந்துள்ளது.கடந்த 18 முதல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளதால், டீசல் விலையில் ஒரு முறை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, ஓராண்டிற்கு முன் டீசல் என்ன விலைக்கு விற்கப்பட்டதோ அந்த நிலையை இப்போது அடைந்துள்ளது.

நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் லாபம் : கடந்த ஜூனில், ஒரு பேரல் கச்சா எண்ணெய், 115 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இப்போது, 87 டாலராக குறைந்துள்ளது. இதனால், ஒரு சிலிண்டருக்கு, 7 - 8 அமெரிக்க டாலர்கள் லாபமாக பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கிடைத்து வருகிறது. அது போல, டாலர் - ரூபாய் மதிப்பு ஸ்திரமடைந்துள்ளதால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு லாபம் அதிகரித்துள்ளது. இந்த லாபத்தை குறைத்துக் கொண்டு விலை குறைப்பு செய்ய, பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி