பணியில் சேர்ந்து, ஏழு மாதங்களில், அரசு ஊழியர் மரணமடைந்தார். உயர் நீதிமன்ற உத்தரவால், 26 ஆண்டுகளுக்கு பின், அவரது மனைவிக்கு, 'பென்ஷன்' கிடைக்க உள்ளது.சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையில், அலுவலக உதவியாளராக, கே.சந்திரசேகர் என்பவர், 1987, நவம்பரில், பணியில் சேர்ந்தார்.
1988 ஜூனில், இறந்து விட்டார். சந்திரசேகருக்கு, மனைவியும், மகளும் உள்ளனர். சட்டப்பூர்வ வாரிசு என, சென்னை, சிவில் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பலன்களை அளிக்கக் கோரி, சுகாதார துறையிடம், சந்திரசேகரின் மனைவி ராதா பாய், விண்ணப்பித்தார். எந்த பலனும்இல்லை. இதையடுத்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில், 2002ல் ராதா பாய், மனுத் தாக்கல் செய்தார். தீர்ப்பாயம் கலைக்கப்பட்ட பின், அந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மனுதாரர் சார்பில்,வழக்கறிஞர் பி.கிறிஸ்துதாஸ்; அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் கோவிந்தசாமி; முதன்மை கணக்கு துறை சார்பில், வழக்கறிஞர் விஜய் சங்கர் ஆஜராகினர்.மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: பணியில் சேர்ந்து, ஓராண்டு பூர்த்தியாவதற்கு முன், அரசு ஊழியர் இறந்தால், அவரது குடும்பம், பென்ஷன் பெற உரிமை உள்ளது என, விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகள் குறித்து, வழக்கறிஞர் விஜய் சங்கர், என் கவனத்துக்கு கொண்டுவந்தார். எனவே, ஓய்வூதிய பலன்கள், பென்ஷன் குறித்த ஆவணங்களை, முதன்மை கணக்கு துறைக்கு, சுகாதார துறை, நான்கு வாரங்களுக்குள் அனுப்ப வேண்டும். ஓய்வூதிய பலன்கள், இதுவரை அளிக்கப்படவில்லை என்றால், வட்டியுடன் வழங்க வேண்டும். சுகாதாரத் துறையிடம் இருந்து ஆவணங்கள் வந்த உடன், அதற்கு, முதன்மை கணக்கு துறை ஒப்புதல் வழங்க வேண்டும்.
கணவர் இறந்த பின், குடும்ப பென்ஷனுக்காக, மனைவி போராடிக் கொண்டிருக்கிறார். அதை, காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
PG final list for Welfare schools.....????
ReplyDelete