சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் இன்று - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2015

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் இன்று


சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் இன்று. விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு முன் இருந்த இந்தியா என்பது வேறு; அவர் சிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு தோன்றிய இந்தியா என்பது வேறு.

விவேகானந்தரின் சொற்பொழிவுக்குப் பிறகு தான் இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், கல்வியில் மறுமலர்ச்சி தோன்றியது. அரசியல், சமுதாய, தேசிய, ஆன்மிக சக்திகள் எழுச்சி பெற அவரது சொற்பொழிவு அடித்தளமாக இருந்தது.விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் வட இந்தியா, தென்னிந்தியா என்றும், பல மாநிலங்களால், மொழிகளால், மதப்பிரிவுகளால், பழக்க வழக்கங்களால் இந்தியா பல பிரிவுகளை கொண்டிருந்தது. இந்தியர்கள் பல காரணங்களால் தனித்தனியாக இந்தியாவை நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில், 'இந்தியா முழுவதும் ஒரு நாடு... இந்தியப் பண்பாடு என்பது ஒன்று தான்... இந்துமதம் என்பது ஒன்று தான்...' என உறுதியாக உணர்ந்தவர்... உணர்த்தியவர் விவேகானந்தர்.
பலத்தை நினைவுபடுத்தியவர் :



இந்திய மக்களுக்கு தங்களின் பலத்தை நினைவுபடுத்தியவர் சுவாமி விவேகானந்தர். விவேகானந்தர் புதிய இந்தியாவிற்கும், பழைய இந்தியாவிற்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார். பண்டைய மெய்ஞ்ஞானத்திற்கும், இன்றைய விஞ்ஞானத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார். மேற்கு நாடுகளின் சிந்தனைகளுக்கும், கிழக்கு நாடுகளின் சிந்தனைகளுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார். விவேகானந்தர் ஓர் 'ஆன்மிக சூப்பர் மார்க்கெட்'. அவரிடம் பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம், ராஜயோகம் ஆகியவை உண்டு; சாக்தம் கூறும் சக்தி வழிபாடு பற்றிய கருத்துக்களும், சைவம் சார்ந்த கருத்துக்களும் வைணவக் கருத்துக்களும் உண்டு. சமய சமரசம் பற்றிய கருத்துகளும், சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களும் உண்டு. தொண்டு, கலைகள், பெண்கள் முன்னேற்றம், கல்வி, ஏழை எளியவர்களை உயர்த்துதல், பொருளாதாரம், தீண்டாமை, மக்களுக்கிடையில் சமத்துவம் போன்ற சமுதாய நலனுக்கு உகந்த கருத்துகளும் அவரிடம் உண்டு. இவ்விதம் விவேகானந்தர் ஓர் ஆன்மிக சூப்பர் மார்க்கெட் போன்று இருந்தாலும், அடிப்படையில் அவர் ஒரு பூரணஞானி.விவேகானந்தர் மனிதகுலத்திற்கு முக்திநெறியைக் காட்டுவதற்காக பிறந்தவர். அது அவரது வாழ்க்கையின் முக்கிய அம்சம்.

எழுச்சியைத் தோற்றுவித்தவர் :



சுவாமி விவேகானந்தர் நேரடியாக, மறைமுகமாக அரசியலில் ஈடுபட்டது கிடையாது. அவரது தேசபக்தி கருத்துகள்தான் முதன் முதலில், இந்தியாவில் தேசிய எழுச்சியை ஏற்படுத்தியது. அந்நாளில், 'தேசபக்த ஞானி' என போற்றப்பட்டார்.விவேகானந்தர் இந்தியாவில் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் தேசபக்தி கருத்துகள் நிறைந்திருக்கின்றன. இச் சொற்பொழிவுகள் அடங்கிய விவேகானந்தரின் நூல் இந்திய விடுதலைப்போர் நடந்த போது 'இந்திய தேசியத்திற்குப் பைபிள்' என்று அழைக்கப்பட்டது.விவேகானந்தரால் முதலில் வங்கத்தில் தேசிய எழுச்சி தோன்றியது. பிறகு அது இந்தியா முழுவதும் பரவியது. பின்னர் அது மகாத்மா காந்தியடிகள் தலைமையில் நல்ல வடிவம் பெற்றது. விவேகானந்தரின் தேசபக்தி கருத்துகள், இந்தியாவில் விடுதலைப் போராட்டம் தோன்ற அடித்தளம் அமைத்தன.

தலைவர்கள் பார்வை :



இது குறித்து பாரதியார், "விவேகானந்த பரம ஹம்ச மூர்த்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்என கூறியிருக்கிறார்.காந்திஜி, "சுவாமி விவேகானந்தர் எழுதிய எல்லா நூல்களையும், முழுவதும் படித்திருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகு, என் தாய்நாட்டின் மீதிருந்த தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்றுஎன்று கூறியிருக்கிறார். "உண்மையில் இன்றைய இந்தியா விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது,” என நேதாஜி கூறியிருக்கிறார்.ராஜாஜி, "இந்தியாவையும் இந்துமதத்தையும் காப்பாற்றியவர் சுவாமி விவேகானந்தர். அவர் இல்லையென்றால், நாம் நமது இந்துமதத்தை இழந்திருப்போம்; இந்தியா விடுதலையும் பெற்றிருக்காது,'' என கூறியிருக்கிறார்.
இந்தியாவின் மீது நல்லெண்ணம் :



ஒவ்வொரு வருடமும், 'இந்தியக் கலாச்சார குழுவினர்' என்று, பலரை இந்திய அரசு தன் செலவில் மேலைநாடுகளுக்கு அனுப்புகிறது. இத்தகைய இந்தியக் கலாச்சார குழுவினர், இந்தியாவின் மீது ஓரளவு நல்லெண்ணத்தை மற்ற நாடுகளில் ஏற்படுத்துகிறார்கள் என்பது உண்மை.இது போன்று இந்தியாவிலிருந்து சென்ற எந்த இந்தியக் கலாச்சார குழுவும் செய்யாத அளவுக்கு, அந்நிய நாட்டவருக்கு இந்தியாவின் மீது நல்லெண்ணம் ஏற்படச் செய்தவர் விவேகானந்தர்."இந்தியா உலகை வெல்ல வேண்டும்...இந்தியா உலகின் ஆன்மிக குருவாக விளங்க வேண்டும்என்று விவேகானந்தர் கூறியுள்ளார்.விவேகானந்தர் கூறிய, "இந்தியா உலகை வெல்ல வேண்டும்என்பது ஆங்கிலேயர் செய்தது போன்று ஆயுத பலத்தாலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலும் அல்ல. "உலகிற்கு அமைதி தரும் கருத்துகளாலும், இந்தியாவின் ஆன்மிகச் சிந்தனைகளாலும் இந்தியா உலகை வெல்ல வேண்டும்,” என்றே கருதினார். இதை அவர், " இந்தியாவே விழித்தெழு! உன்னுடைய ஆன்மிகத்தால் உலகை வெற்றிகொள்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.இந்தியாவில் இந்துமதத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. "இவர்கள் அனைவரையும் ஒரு குடையின் (கொடியின்) கீழ் கொண்டுவர முடியுமா?” என்றால், "முடியாதுஎன்றுதான் சொல்ல வேண்டும். ஓர் ஆன்மிகத் தலைவரின் கீழ் இந்தியர்கள் எல்லோரையும் ஒன்றுபடுத்துவது என்பது இயலாத காரியம்.அப்படி முயற்சி செய்தால் பெரும்பாலான இந்துக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக விவேகானந்தர் இருப்பார் என்று சொல்லலாம்.

விவேகானந்தர் மறைவதற்கு முன் உலகிற்கு வழங்கிய கடைசி உபதேசம் இது: இந்தியா ஆன்மிக பூமி, அமரத்துவம் வாய்ந்த பூமி. உலக வரலாற்றில் சில நாடுகள் சில சமயங்களில் எழுச்சி பெற்றிருக்கும்; உலக வரலாற்றில் சில சமயங்களில் சில நாடுகள் வீழ்ச்சி பெற்றிருக்கும். ஆனால் இந்தியா அமரத்துவம் வாய்ந்த பூமி. இறைவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால் இந்தியா என்றும் வாழும். அரசியலையும், சமூகச் சச்சரவுகளையும் தேடிப் போனால் இந்தியா செத்துவிடும்.


19 comments:

  1. சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
    :
    விவேகானந்தர்

    ReplyDelete
  2. சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

    ReplyDelete
  3. விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

    பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

    ReplyDelete
  4. சகோதர சகோதரிகள்
    சுவாமி விவேகானந்தருக்கு மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத் தத்தர் எனும் இரு இளைய சகோதரர்களும், மூத்த, இளைய சகோதரிகளும் இருந்தனர். பூபேந்திரநாத் தத்தர் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். சகோதரிகளில் ஒருவர் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமை தாளாது தற்கொலை செய்து கொண்டார்.[

    ReplyDelete
  5. இராமகிருஷ்ணருடன்
    இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  6. துறவறம்
    1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

    ReplyDelete
  7. குரல் வளம்
    தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற இனிமையான குரல் என்று சட்டம்பி சுவாமிகள், சுவாமி விவேகானந்தரது குரல் வளம் குறித்துக் கூறுகின்றார்

    ReplyDelete

  8. சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்

    கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

    ReplyDelete
  9. இந்தியா திரும்புதல்
    1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.

    கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1899 சனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

    ReplyDelete
  10. மறைவு
    1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

    ReplyDelete
  11. விவேகானந்தரின் கருத்துக்கள்
    மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

    ReplyDelete
  12. தமிழர் பற்றி விவேகானந்தர்
    சென்னை மாகாணத்திலிருந்தே தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே பைபிள் உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர்

    ReplyDelete
  13. விவேகானந்தரின் பொன்மொழிகள்

    உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

    கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்

    உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

    செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
    வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.

    உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

    சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

    எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

    நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
    இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.

    இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

    வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

    சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.
    என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
    உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

    நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

    ReplyDelete
  14. அவரது கவிதைகள்

    கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.

    எடுத்துக்காட்டாக..

    அனைத்தும் ஆகி அன்பாகி
    அமைபவன் அவனே அவன்தாளில்
    உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்
    உடனே தருக என் நண்பா

    இவைகள் யாவும் உன்முன்னே
    இருக்கும் அவனின் வடிவங்கள்
    இவைகளை விடுத்து வேறெங்கே
    இறைவனைத் தேடுகின்றாய் நீ

    மனத்தில் வேற்றுமை இல்லாமல்
    மண்ணுல கதனில் இருக்கின்ற
    அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
    ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்

    --விவேகானந்தர்

    ReplyDelete
  15. நீ பற்றற்றிரு; மற்றவை சேவை செய்யட்டும்; மூளையின் பகுதிகள் வேலை செய்யட்டும்; ஆனால் ஓர் அலைகூட மனத்தை வெல்ல இடம் கொடுக்காதே.ஓர் அன்னியன் போலவும் வழிப்போக்கன் போலவும் வேலை செய், ஆனால் உன்னைத் தளைகளுக்கு உள்ளாக்காதே. அது அஞ்சத்தக்கது. -

    சுவாமி விவேகானந்தர்

    ReplyDelete
  16. Vivekanantharin pon moligal varalattai kuriya anpu sakotharanuku en nanriyai samarpikiren. Adw list il weitage 70.5 ullathu pani niyamanam kidaikuma tholarey ...

    ReplyDelete
    Replies
    1. sent your mail id to this mail id akilannatarajan6@gmail.com
      i wiil sent that details

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி