வினா - விடைத்தாள் பாதுகாப்பில் தேர்வுத்துறை அலட்சியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2015

வினா - விடைத்தாள் பாதுகாப்பில் தேர்வுத்துறை அலட்சியம்


பொது தேர்வுக்கான விடைத்தாள் மற்றும் வினாத்தாள்களை, தேர்வுக்கு, 25 நாட்களுக்கு முன்பே தேர்வுத்துறை வினியோகம் செய்ததால், அதை பாதுகாப்பதில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன.பத்தாம் வகுப்பு பொது தேர்வு,
வரும், 19ம் தேதி துவங்கி, ஏப்ரல், 10ம் தேதி முடிகிறது. 2012ம் ஆண்டுடன் (ஏப்., 4 முதல், 23 வரை) ஒப்பிட்டுபார்த்தால், இந்த ஆண்டு, 15 நாள் முன்கூட்டியே தேர்வு நடக்கிறது. தேர்வுத்துறையின் அவசர அழுத்தம் காரணமாக, வகுப்பு எடுக்கும் நாட்கள் குறைக்கப்பட்டன.

ஏன் இந்த அவசரம்?

பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கும், அவசரகதியில் வகுப்பு எடுக்கப்பட்டதில், மூன்று பருவ தேர்வுகளில், ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த தேர்வுப் பணிகளும், முன்கூட்டியே திட்டமிட்டு, வேகமாக ஏற்பாடு செய்து வருவதால், அதற்கேற்ப, பாட திட்டங்களை முடிக்க முடியாமலும், மாதிரி தேர்வுகளை,சரிவர நடத்தி முடிக்காமலும், தேர்வுத்துறையின் இழுப்பிற்கு, பள்ளிகள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு கேள்விக்குறி:

கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பொதுவாக, பொதுத் தேர்வு துவங்குவதற்கு, ஓரிரு நாட்கள் முன் தான், வினாத்தாள், விடைத்தாள், மாவட்டங்களுக்கு வந்து சேரும். அதுவும், வினாத்தாள் அச்சிடப்படும் இடத்தில் இருந்து நேராக, தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும். கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வுக்கு, இரண்டு கட்டமாக வினாத்தாள்கள் வந்தன. ஆனால், நடப்பு கல்வியாண்டில், எல்லாமே வேகமாக நடக்கிறது.

25 நாளுக்கு முன்...:

பிளஸ் 2 தேர்வு, வரும், 5ம் தேதி துவங்க உள்ள நிலையில், பிப்ரவரி முதல் வாரமே, விடைத்தாள் வந்து சேர்ந்தன. அதன், 'டாப் ஷீட்' தைக்கும் பணியும் முடிந்து, அந்தந்த தேர்வு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வினாத்தாள்கள், கடந்த மாதம் 19ம் தேதியே வந்துவிட்டன. இவை, அந்தந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டன. வினாத்தாள், விடைத்தாள்களை, பல நாட்கள் முன்கூட்டியே அனுப்பியதால், அவற்றை பாதுகாப்பதில்,பெரும் பிரச்னைகளை சந்திக்கிறோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

குளறுபடிகள் என்னென்ன?

மாவட்ட அதிகாரிகள் சிலர் கூறியது:
* இதில், வினாத்தாள்கள், தேர்வுக்கு, 15 நாட்களுக்கு முன்பும், விடைத்தாள்கள், 25 நாட்களுக்கு முன்பும் வந்துவிட்டன.
* இதனால், வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாத்து வைப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
* மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ள, 'ஸ்ட்ராங் ரூம்', பாதுகாப்பு அதிகம் கொண்டதாக இருக்கும். ஆனால், மற்ற பாதுகாப்பு மையங்களில் போதுமான பாதுகாப்பு இல்லை.
* இதனால், எவ்வித அசம்பாவிதம் நடத்தாலும், மாவட்ட கல்வி அதிகாரிகள் தலையில் விழுகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி