என்.ஓ.சி., பெறாமல் சி.பி.எஸ்.இ.,க்கு மாற்றம்: வசூலை அதிகரிக்க தடம் மாறும் தனியார் பள்ளிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2015

என்.ஓ.சி., பெறாமல் சி.பி.எஸ்.இ.,க்கு மாற்றம்: வசூலை அதிகரிக்க தடம் மாறும் தனியார் பள்ளிகள்


கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்காக, பல மெட்ரிக் பள்ளிகள், அரசின் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) பெறாமல், சி.பி.எஸ்.இ.,க்கு மாறி வருகின்றன.தமிழகத்தில், 9,600 அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன; 5,000 தொடக்கப் பள்ளிகளும் செயல்படுகின்றன.
இவற்றில், 4,000 தனியார் மெட்ரிக் பள்ளி கள், 40 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும் செயல்படுகின்றன.

அனுமதி இல்லாமல்...:

தனியார் தொடக்கப் பள்ளிகள் பட்டியல், அரசிடம் தெளிவாக இல்லை. ஏனெனில், பெரும்பாலான பள்ளிகள் அனுமதியின்றி நடத்தப்படுகின்றன.இந்நிலையில், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைத் தவிர, தனியார் மெட்ரிக் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. இதனால், மூலை முடுக்கெல்லாம் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் புற்றீசல் போல அதிகரித்துள்ளன. இவற்றை கட்டுப்படுத்த, சில கல்வித் துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலுக்கு வந்ததால், மெட்ரிக் பள்ளிகள் தங்கள் விருப்பத்துக்கு, தனியார் நிறுவனங்களிடம் புத்தகம் வாங்கி, அதன் மூலம் கூடுதல் கட்டணம் பெற முடியவில்லை. இதேபோல், தமிழக அரசின் கட்டண நிர்ணயக் குழுவும், பள்ளியின் உள்கட்டமைப்புக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்து, அதை பின்பற்ற கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது. இதனால், தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பத்துக்கு, மாணவ, மாணவியரிடம் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. எனவே, பல மெட்ரிக் பள்ளிகள் ஓசையில்லாமல், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. பாடத்திட்டம் மாற, மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தில், என்.ஓ.சி., வாங்க வேண்டும். ஆனால், பெரும் பாலான பள்ளிகள், என்.ஓ.சி.,க்கு விண்ணப்பித்துவிட்டு, சான்றிதழ் வாங்காமல், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் பெற்று விடுகின்றனர்.

உள்கட்டமைப்பு வசதிகள்:

சி.பி.எஸ்.இ., வாரியமும், என்.ஓ.சி., பற்றி கவலைப்படாமல், அனுமதி அளித்து விடுகிறது. மத்திய அரசின் அதிகாரிகளும் நேரடியாக பள்ளிகளில் ஆய்வு செய்வதில்லை.அதனால், பல பள்ளிகள் விளையாட்டு மைதானம், ஆய்வகம், விளையாட்டு உபகரணங்கள், தேவையான ஆசிரியர்கள், தரமான கட்டடம், தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்படத் துவங்கிவிட்டன.இப்பள்ளிகளில் ஆய்வு நடத்தி, அவற்றின் அங்கீ காரத்தை ரத்து செய்வதோடு, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

என்னென்ன தேவை?

தமிழக அரசிடம், என்.ஓ.சி., பெற, சில முக்கிய ஆவணங்களை பள்ளிகள் வைத்திருக்க வேண்டும். இரண்டு பிரிவு இடங்களில், ஒரே பள்ளி செயல்படக்கூடாது. போதுமான இட வசதி, கட்டட நிலைச்சான்று இருக்க வேண்டும். தீயணைப்புக் கருவிகள் பொருத்தி, தீயணைப்புத் துறை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்; சுகாரதாரத் துறை ஆய்வாளர்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்; கட்டட அனுமதி இருக்க வேண்டும். இந்த உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டால், என்.ஓ.சி., கிடைக்காது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி