விடைத்தாள்களை, மற்ற பள்ளி ஆசிரியர்கள் மூலம் திருத்த ஏற்பாடு செய்ய கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2015

விடைத்தாள்களை, மற்ற பள்ளி ஆசிரியர்கள் மூலம் திருத்த ஏற்பாடு செய்ய கோரிக்கை


துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை அறிய, அவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாள்களை, மற்ற ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள் மூலம் திருத்துவதற்கு, கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மட்டுமே, பிற மாவட்ட ஆசிரியர்கள் மூலம் திருத்தப்படுகின்றன. மாணவர்களின் கல்வித்தரத்தை அளவிடுவதில், எவ்வித முறைகேடும் நடைபெறாமல் இருக்க, இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது.தற்போது, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆல்பாஸ் முறை என்பதால், மாணவர்கள் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற புகார் உள்ளது.

தேர்வில் முழுமையாக விடை எழுதாவிட்டாலும், அம்மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டிய கட்டாயத்தில், ஆசிரியர்கள் உள்ளனர். இதனால், பல பெற்றோருக்குகுழந்தைகளின் கல்வித்தரம் குறித்து, முழுமையாக அறிய முடிவதில்லை.இந்நிலையை மாற்றும் வகையில், பல மாவட்டங்களில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தேர்வு விடைத்தாள்களை, மற்ற ஒன்றிய பள்ளி ஆசிரியர்களின் மூலம் திருத்துவதற்கான நடவடிக்கைகள், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதன்மூலம், மாணவர்களின் உண்மையான கல்வித்தரத்தையும், பள்ளியின் தரத்தையும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த நடைமுறையை, திருப்பூர் மாவட்டத்திலும் பின்பற்ற வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களின் கல்வித்தரத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்வதால், அவர்கள் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தேர்வு முடிவு தெரிவிக்கப்படும் நாளில், அதை தெரிந்து கொள்வதில் கூட ஆர்வம் காட்டுவதில்லை.

மாணவர்களை, கட்டாயம், பாஸ் செய்தே தீர வேண்டும் என்ற நிலையில், ஆசிரியர்கள் உள்ளனர்.பள்ளிகளின் கற்பித்தல் நிலை என்ன என்பதை, அந்தந்த பள்ளி நிர்வாகத்தினரே அளவிட முடியாத நிலை உள்ளது. மற்ற பள்ளி ஆசிரியர்கள் மூலம் தேர்வு விடைத்தாள்களை திருத்தினால், மாணவர்களின் கல்வித்திறன் மட்டுமின்றி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் சுயமதிப்பீடு செய்ய முடியும்.உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நடப்பது போல், துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும், மூன்றாம் பருவத்தேர்வை முன்னதாகவே நடத் தினால், அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கையை விரைந்து துவக்க முடியும். இதற்கு, மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி