பாழாகிறது ஏழை கல்லூரி மாணவர்களுக்கான வெளிநாட்டுக் கல்வி: பேராசிரியர்கள் கவலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2015

பாழாகிறது ஏழை கல்லூரி மாணவர்களுக்கான வெளிநாட்டுக் கல்வி: பேராசிரியர்கள் கவலை


ஏழை மாணவர்களை வெளிநாட்டில் படிக்க வைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு, அரசுக் கல்லுாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது; இதனால், ஏழை மாணவர்களின் வெளிநாட்டு கல்விக் கனவு பாழாகிவருவதாக பேராசிரியர்கள் கவலைதெரிவிக்கின்றனர்.
ஏழை மாணவர்கள் வெளிநாடு சென்று படித்து வரும் வகையில் சிறந்த திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அதன்படி, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, ஒரு பருவம் பிரிட்டனில் உள்ள பல்கலைக் கழகங்களில், முழுவதும் அரசு செலவில் படிக்க வைக்கப்படுகின்றனர்.ஆண்டுக்கு 25 மாணவர்களும், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கென ஐந்து பேராசிரியர்களும் அனுப்பி வைக்கப்படுவர். தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், மார்ச் மாதத்தில் அனைத்து அரசு கல்லுாரி முதல்வர்களுக்கும் இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்படும்.படிப்பில் சிறந்த மாணவர்களைத் தேர்வுசெய்து, விண்ணப்பங்களை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தில் கல்லுாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு, முதுகலை முதலாமாண்டு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள், இளங்கலையில், 70 சதவீத மதிப்பெண் தேர்ச்சி, ஆங்கிலம் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.முதல் கட்டமாக கல்லுாரி அளவில் நடத்தப்படும் தேர்வில் தகுதிபெற வேண்டும். பின், பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் சர்வதேச ஆங்கில மொழித்திறன் தேர்வு (ஐ.இ.எல்.டி.எஸ்.,), பேச்சுத் திறன் தேர்வு, நேர்முகத்தேர்வுகளில் தகுதி பெற வேண்டும்.

இத்திட்டத்தில், மாணவர்கள் பிரிட்டனின் கலை, கலாசாரம், கல்வித் திட்டங்களை அறிந்து கொள்வதோடு, சர்வதேச அறிவையும் பெற முடிகிறது. ஆனால், இத்திட்டத்தின் மீது பல அரசு கல்லுாரிகள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு உயர் கல்விமன்ற அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டத்தில், 2015 - 16 கல்வியாண்டுக்கு கடந்த மார்ச் மாதம் அரசு கலை கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. கல்லுாரிகள் மாணவர்களைத் தேர்வு செய்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏப்., 11ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், 25க்கும் குறைவான கல்லுாரிகள் மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்பின; மீதமுள்ள 40க்கும் மேற்பட்ட கல்லுாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவில்லை.தவிர, இத்திட்டம் குறித்து மாணவரிடம் போதிய விளம்பரமோ, அறிவிப்போ கல்லுாரிகள்செய்யவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

கால அவகாசம் தேவை!

அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "கடந்த மாத இறுதியில்தான் உயர்கல்வி மன்றத்திலிருந்து சுற்றறிக்கை வந்தது. இம்மாதம் 11ம் தேதி விண்ணப்பிக்க கடைசியாக அறிவிக்கப்பட்டது. பருவத்தேர்வும் நடந்துவருவதால், குறுகிய காலத்தில் மாணவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, குறைந்தது 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்" என்றார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி