கலாம் பாடத்துடன் புதிய பி.இ., வகுப்பு துவக்கம் அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகள் ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2015

கலாம் பாடத்துடன் புதிய பி.இ., வகுப்பு துவக்கம் அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகள் ஏற்பாடு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 534 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஆகஸ்ட், 3ம்தேதி, புதிய வகுப்புகள் துவங்க உள்ளன. முதல் நாளில், முன்னாள் ஜனாதிபதியும், அண்ணா பல்கலை முன்னாள் கவுரவ பேராசிரியருமான அப்துல் கலாமுக்கு அஞ்சலி மற்றும் அவரைப் பற்றி பாடம் நடத்தப்பட உள்ளது.


இதுகுறித்து, அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:இன்ஜினியரிங் கல்லுாரிகளில், புதிய கல்வி ஆண்டு துவங்கும் நிலையில், இன்ஜி., துறையில் எட்டமுடியாத சாதனைகளைச் செய்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்துள்ளார். அண்ணா பல்கலையின், எம்.ஐ.டி., கல்லுாரியில், பி.இ., படித்த அவர், ஜனாதிபதியாகும் முன், அண்ணா பல்கலையில் கவுரவ பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். எனவே, முதல் நாள் வகுப்பில், அப்துல் கலாமுக்கு மவுன அஞ்சலி செலுத்துவதுடன், மாணவர்களுக்கு கலாமின் அறிவியல் வரலாற்று சாதனைகளை பாடமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு உந்துசக்தி கிடைக்கும் விதத்தில், அவரைப்போல் சிறந்த முறையில் படித்து, தாய்நாட்டுக்காக ஆராய்ச்சியில் ஈடுபட மாணவர் உறுதிமொழி எடுத்த பின்,வழக்கமான வகுப்புகள் துவங்கும். இவ்வாறு அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விண்வெளி ஆய்வு மையத்துக்கு கலாம் பெயர் சூட்ட கோரிக்கை:

நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கூறியதாவது:

விண்வெளி ஆய்வில் பல படிகள் பின்தங்கியிருந்த இந்தியா, மற்ற நாடுகளோடு போட்டி போடும் அளவுக்கு உயர்ந்ததில், கலாமுக்கு முக்கிய பங்கும் உண்டு.அப்படிப்பட்ட திறமை மிகு மனிதர்; இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிய போது தான், தமிழகத்தின் மகேந்திரகிரியில், விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் உருவாக்கம் மற்றும் சோதனையிடும் பணிகள், இங்கு தான் முழுமையாக நடக்கின்றன.ராக்கெட் செயல்பாட்டில் நவீனமாகக் கருதப்படும், 'க்ரையோஜெனிக்' இன்ஜினை அமைக்க பல நாடுகள், சிரமப்பட்டு வரும் போது, கலாமின் சிஷ்யரான சிவன் தலைமையில் செயல்பட்ட விஞ்ஞானிகள் பலரும், மகேந்திரகிரியிலேயே அதைச் செய்து முடித்தனர்.

கிட்டத்தட்ட, 6,000 ஏக்கரில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு, அப்துல்கலாம் நினைவாக, அவரது பெயரை சூட்ட வேண்டும். அவரது கனவுப்படி, ராக்கெட் தொழில் நுட்பத்தை, வருங்கால இளைஞர்களுக்கும் அதிக அளவில் கொண்டு செல்லும் விதமாக, இந்த வளாகத்துக்குள்ளேயே, சிறப்புக் கல்லுாரி ஒன்றையும் அமைக்க வேண்டும்.அதேபோல, அருகில் உள்ள குலசேகரப்பட்டினத்தில், ராக்கெட் ஏவுதளம் ஒன்றை அமைக்க வேண்டும். அதற்கும், கலாம் பெயரை சூட்ட வேண்டும். வரும், 7ம் தேதி, தமிழகம் வரும் பிரதமர் மோடியை, இந்தக் கோரிக்கைகளுடன் சந்திக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி