கல்வி நிறுவனங்களின் கட்டண மதிப்பீட்டு சான்றிதழ் அடிப்படையில் வங்கிகள் கல்வி கடன் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2015

கல்வி நிறுவனங்களின் கட்டண மதிப்பீட்டு சான்றிதழ் அடிப்படையில் வங்கிகள் கல்வி கடன் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வி நிறுவனங்கள் அளிக்கும் கட்டண மதிப்பீட்டு சான்றிதழ் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்விக் கடனாக வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


நாகர்கோவிலைச் சேர்ந்தவர் பி.என்.சுப்பிரமணியன். இவர் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் (சூரிய மின்சக்தி) சேர்ந்துள்ளார். இவருக்கு கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக ரூ.4.70 லட்சம் செலுத்த வேண்டியது வரும் என பல்கலைக்கழகம் கட்டண மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கியது. அந்த சான்றிதழ் அடிப்படையில் கல்விக் கடன் கேட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மாணவர் விண்ணப்பித்தார். ஆனால்,அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டண அடிப்படையில் ரூ.1.70 லட்சம் மட்டுமே கல்விக் கடன் வழங்க முடியும் என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, முழு கட்டணத்தையும் கல்விக் கடனாக வழங்க வங்கிக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். வங்கி பதில் மனுவில், கல்வி கட்டண நிர்ணயக்குழு விதிப்படி ஒவ்வொரு பருவத்துக்கும் ரூ.30000 வீதம் கல்விக் கட்டணம், ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் விடுதி கட்டணம் மட்டுமே கல்வி கடனாக வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மாநில கல்வி கட்டண நிர்ணயக் குழுவின் விதிப்படிதான் கல்விக் கட்டணம் வழங்க முடியும் என்ற கருத்தை உயர்நீதிமன்ற தலைமை அமர்வு 2013-ம் ஆண்டில் நிராகரித்து உத்தரவிட்டது.


படிப்பில் உயர்ந்தும், பொருளாதாரத்தில் தாழ்வாகவும் உள்ள மாணவர்களுக்கு கல்வி நிறுவனம் கேட்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீத கட்டணம் மட்டும் கல்வி கடனாக வழங்கப்படும் என வங்கிகள் தெரிவிப்பது கல்விக் கடன் வழங்குவதற்கான நோக்கத்தை நிறைவேற்றாது கல்விக் கட்டண நிர்ணய குழு பரிந்துரைக்கும் கட்டணம் கல்வி கடனாக வழங்கப்படும் என்பதை ஏற்க முடியாது. மனுதாரருக்கு அவர் சேர்ந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் வழங்கிய கல்வி கட்டணமதிப்பீட்டு சான்றிதழ் அடிப்படையில் கல்விக் கடன் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி